பாகிஸ்தான் பக்கமா போறீங்க.. துருக்கிக்கு அடுத்த செக்.. பருத்தி கூட்டமைப்பு எடுத்த அதிரடி முடிவு
மும்பை: ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை கண்டித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் உள்ளன. இதனால் அந்த 2 நாடுகளையும் புறக்கணிக்க நம் நாட்டு மக்கள் முடிவு செய்து வருகின்றனர். அதேபோல் வர்த்தக உறவையும் துண்டித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய பருத்தி கூட்டமைப்பு சார்பில் துருக்கி உடனான வர்த்தகம் என்பது கைவிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளை, பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதையடுத்து ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் கண்டித்தன.

இதற்கு முக்கிய காரணம் 2 நாடுகளும் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருவது தான். துருக்கி ட்ரோன் உள்பட முக்கிய ராணுவ தளவாடங்களை பாகிஸ்தானுக்கு வழங்கி வருகிறது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக நம் நாடு மேற்கொண்ட ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து துருக்கியை புறக்கணிக்க நம் நாட்டு மக்கள் தொடங்கி உள்ளனர். அதேபோல் துருக்கி உடனான வர்த்தகத்தையும் நம் நாட்டு நிறுவனங்கள் ரத்து செய்து வருகின்றன. நம் நாட்டின் நலனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாட்டுடன் எந்த தொடர்பும் கிடையாது என்பதை காட்டும் வகையில் நம் நாட்டு மக்கள், வர்த்தகர்கள் இந்த முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக இந்திய பருத்தி கூட்டமைப்பு (Cotton Association of India CAI) சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது துருக்கி நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. துருக்கி பாகிஸ்தானுக்கு ட்ரோன் உள்பட பிற ஆயுதங்களை வழங்கி நம் நாட்டின் மீதான தாக்குதலுக்கு உதவி செய்தது. காஷ்மீர் விவகாரத்தில் எப்போதுமே ஐநா உள்பட பிற சர்வதேச அமைப்புகளில் துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது. இது நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது.
துருக்கி நம் நாட்டிடம் இருந்து பருத்தி உள்பட பிற பொருட்களை இறக்குமதி செய்கிறது. துருக்கி ஆண்டுக்கு 74.27 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பருத்தியை நம்மிடம் இருந்து வாங்குகிறது. துருக்கியில் இருந்து இந்தியாவுக்கான ஏற்றுமதி என்பது 2.84 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உள்ளது. தற்போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளதால் அந்த நாட்டுடனான வர்த்தகத்தை துண்டிக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்'' என்று கூறியுள்ளார்.
துருக்கியை பொறுத்தமட்டில் நம் நாடு மிகவும் முக்கியமான நாடாக உள்ளது. நம் நாட்டை வைத்து துருக்கி அதிக லாபம் ஈட்டி வருகிறது. நம் நாட்டுக்கும், துருக்கிக்கும் இடையே கடந்த 2023-24ம் ஆண்டில் சரிந்து 10.43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் நடந்தது. இதில் 6.65 பில்லியன் டாலருக்கு துருக்கியில் இருந்து பொருட்களை நாம் இறக்குமதி செய்துள்ளோம். 3.78 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நாம் துருக்கிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம். அதேபோல் மறுபுறம் 2000 ஆகஸ்ட் முதல் 2024 மார்ச் மாதம் வரை துருக்கிற்கு நம் நாட்டில் இருந்து அந்நிய நேரடி முதலீடு என்ற வகையில் 200 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்தது. இந்நிலையில் தான் துருக்கியை நம் நாட்டு வர்த்தகர்கள் தொடர்ந்து புறக்கணிக்க தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications