ஐசியூவில் அப்பா.. விடுமுறையில் போன ஊழியரை கட்டாய ராஜினாமா செய்ய வைத்த TCS.. தொழிலாளர் ஆணையம் போட்ட உத்தரவு!
மும்பை: மும்பையில் உள்ள டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றிய ஊழியர் தனது தந்தை உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதால் விடுப்பு எடுத்து சென்றார். இதையடுத்து அவரை கட்டாயப்படுத்தி பணிக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என டிசிஎஸ் நிறுவனம் மிரட்டியது. இதையடுத்து அந்த ஊழியர் தனது பணியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அவருக்கான கிராசூவிட்டி தொகையை டிசிஎஸ் வழங்கவில்லை. இதுபற்றி தொழிலாளர் ஆணையத்தில் ஊழியர் புகார் செய்த நிலையில் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு நம் நாட்டின் பல்வேறு நகரங்களிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் மும்பையில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஊழியர் தனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி விடுமுறை எடுத்தார். அவசர விடுப்பு எடுத்து அவர் வீட்டுக்கு சென்றார்.
அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் ஊழியர் தனது தந்தையுடன் இருந்தார். போதுமான அளவுக்கு அவரிடம் விடுப்பு கைவசம் இருந்தது. இதனால் அவர் தனது தந்தையை கவனிக்க விடுமுறையை நீட்டிப்பு கோரினார். ஆனால் டிசிஎஸ் நிறுவனம் அவரது விடுமுறையை நீட்டிக்க மறுத்தது.
அதோடு உடனடியாக பணிக்கு வரும்படி அவருக்கு உத்தரவிட்டது. இதனால் ஊழியர் மனவருத்தம் அடைந்தார். விடுமுறையை நீட்டிப்பு செய்து வழங்கும்படி கூறினார். ஆனால் டிசிஎஸ் நிறுவனம் அனுமதிக்கவில்லை. அதோடு பணிக்கு வரவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார் என்று நிறுவனம் எச்சரிக்கை செய்தது.
இதையடுத்து அந்த ஊழியர் தனது பணியை ராஜினாமா செய்து இன்னொரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதன்பிறகு டிசிஎஸ் நிறுவனம் அவருக்கு கிராசூவிட்டி தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்தது. ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் கிராசூவிட்டி தொகையை ஒரு ஊழியரால் பெற முடியும். ஆனால் அந்த ஊழியர் 7 ஆண்டுகள் பணியாற்றியபோதிலும் டிசிஎஸ் கிராசூவிட்டி தொகையை வழங்க மறுத்தது.
இதனால் அந்த ஊழியர் மும்பை தொழிலாளர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஊழியருக்கான கிராசூவிட்டி தொகையை வழங்க மும்பை தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டது. தற்போது அந்த ஊழியருக்கு கிராசூவிட்டி தொகை கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications