வீர சாவர்க்கர் குறித்து பேசிய விவகாரம்.. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு
மும்பை: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வீர சாவர்க்கர் குறித்து விமர்சித்து பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் உள்ள போலீஸ் நிலையத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத்ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் செல்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கிய இந்த நடைபயணம் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
வெள்ளையர்களுக்கு உதவியது ஆர்எஸ்எஸ்.. சம்பளம் பெற்றார் சாவர்க்கர்.. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்
மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி
சிவசேனாவில் இருந்து பிரிந்து தனி அணியாக சென்று இருக்கும் ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்துள்ளார். பாஜக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்றும் வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை செல்வது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கடந்த 7 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரை நுழைந்தது. தற்போது அம்மாநிலத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்யும் தருவாயில் ராகுல் காந்தி உள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்தார்
இதனிடையே, நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, வீர சவார்க்கர் குறித்து கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி கூறும் போது, "வீர சவார்க்கர் ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்தார். அச்சம் காரணமாக ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து காந்தி உள்ளிட்ட சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு துரோகம் செய்தார்" என்று பேசினார்.
ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு மகராஷ்டிராவில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. ராகுல் காந்தியுடன் கூட்டணியில் இருக்கும் உத்தவ் தாக்கரே கூட ராகுலின் பேச்சுக்கு உடன்பாடு இல்லை என்ற வகையில் பேசினார்.
ராகுல் மீது வழக்கு பதிவு
ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சவார்க்கர் காவல்துறையில் புகார் அளிக்க இருப்பதாக கூறியிருந்தார். இந்த சூழலில், மும்பையில் உள்ள தானே நகர் காவல் நிலையத்தில் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷிண்டே அணியை சேர்ந்த சிவசேனா நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கபப்ட்டது.
2-வதாக ஒரு அவதூறு வழக்கு
ராகுல் காந்தி மீது கடந்த 2014 ஆம் ஆண்டு தானே மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விமர்சனம் எழுந்தது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் அளித்த புகாரின் படி ராகுல் காந்தியின் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தானேயில் ராகுல் காந்தி மீது 2-வதாக ஒரு அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.