"இந்தியா" கூட்டணிக்குள் 'அந்த' ஒரு விஷயத்தில் வேறுபாடு? கைவிடப்பட்ட அரசியல் தீர்மானம்? பரபர பின்னணி
மும்பை: எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் இன்று மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அரசியல் தொடர்பாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது கைவிடப்பட்டுள்ளது. இதற்கு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட வேறுபாடே காரணம் எனக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் ஒரே அணியாக திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாட்னா மற்றும் பெங்களூரில் கூடி எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், மும்பையில் மூன்றாவது கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழு குறித்து முடிவெடுக்கப்பட்டது. மொத்தம் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்றைய கூட்டத்தில் "இந்தியா"அணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரது பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஆனால் ஒருங்கிணைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதேபோல "இந்தியா" கூட்டணி லோகோவும் வெளியிடப்படவில்லை. இதனிடையே அரசியல் தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியானது.
ஆனால், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இடையே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக முரண்பாடு ஏற்பட்டதால் அரசியல் குறித்த தீர்மானம் கைவிடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தீர்மானத்தில் சேர்க்க வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால், மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications