மகாராஷ்டிரா, பாலிவுட்டுக்கு எதிராக பாஜக சதியை நிறைவேற்ற வந்தவர் சமீர் வான்கடே: நவாப் மாலிக் தாக்கு
மும்பை: மகாராஷ்டிரா அரசு, மகாராஷ்டிரா மக்கள் மற்றும் பாலிவுட் திரை உலக நட்சத்திரங்களுக்கு எதிரான பாஜகவின் சதியை நிறைவேற்றவே போதைப் பொருள் தடுப்பு மண்டல அதிகாரி சமீர் வான்கடே மும்பைக்கு கொண்டுவரப்பட்டார் என்று அம்மாநில அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் பெரும் புயலாக வீசி வருகிறது. மும்பையில் இருந்து கடந்த 3-ம் தேதி கோவாவுக்கு சொகுசு கப்பல் புறப்பட்டது.
அந்த கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சொகுசு கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக கூறி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஷாருக்கானிடம் ரூ25 கோடி பேரம்
ஆர்யன் கானின் தந்தை ஷாருக்கானிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரூ25 கோடி பேரம் பேசியதாக இவ்வழக்கின் சாட்சிகளில் ஒருவரான பிரபாகர் செயில் பரபரப்பான குற்றச்சாட்ட்டை கூறியிருந்தார். இதுவும் மகாராஷ்டிராவில் பெரும் புயலை கிளப்பியது. மேலும் போதைப் பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே தொடர்பாக அமைச்சர் நவாப் மாலிக் இடைவிடாமல் பல்வேறு புகார்களை கூறியதுடன் அவரது குடும்பம் தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

சமீர் வான்கடே சர்ச்சை
மேலும் ஆர்யன் கானுக்கு பல முறை ஜாமீன் மறுக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையானது. பெரும் போராட்டத்துக்குப் பின்னரே ஆர்யன் கானுக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது. இந்த வழக்கு சர்ச்சை நீதிமன்றத்துக்கும் போனது. அமைச்சர் நவாம் மாலிக் மீது சமீன் வான்கடேவும் புகார் கூறியிருந்தார். அமைச்சர் நவாப் மாலிக்கின் உறவினர் சமீர் கான், போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதாலே தம் மீது அவதூறு பரப்புவதாகவும் சமீர் வான்கடே குற்றம்சாட்டியிருந்தார்.

பாஜக சதியும் சமீர் வான்கடேவும்..
இந்நிலையில் அமைச்சர் நவாப் மாலிக் இன்று சமீர் வான்கடே மற்றும் பாஜக மீது புதிய புகார்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நவாப் மாலிக் கூறியதாவது: பாலிவுட் நடிகர் சுஷாத் சிங் ராஜ்புத் தற்கொலை மற்றும் போதைப் பொருள் வழக்கில் ரேகா செளத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டதில் இருந்து இந்த பிரச்சனை தொடங்கியது. மகாராஷ்டிரா அரசு, பாலிவுட் திரை உலகத்துக்கு எதிரான இந்த சதியின் பின்னணியில் பாஜக இருக்கிறது. மகாராஷ்டிரா அரசு, பாலிவுட் திரை உலக பிரமுகர்கள் மீது அவதூறு பரப்புவதற்காக பாஜக சதியை அரங்கேற்றி வருகிறது.

பாலிவுட்டை உபிவுட்டாக்க சதி
இந்த சதியை நிறைவேற்றத்தான் சமீர் வான்கடேவை பாஜக மும்பைக்கு கொண்டு வந்தது. பாலிவுட் திரை உலகத்தை உ.பி.க்கு கொண்டு சென்று உபிவுட்டாக மாற்ற சதித் திட்டம் தீட்டி உள்ளனர். அண்மையில் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், நொய்டாவில் பிலிம் சிட்டி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். பாலிவுட் நட்சத்திரங்கள் போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டுவது அத்தனையும் பொய்யானது. ஆர்யன் கான் வழக்கும் பொய்யானதே. போலியான ஆவணங்களை இதற்காக சமீர் வான்கடே உருவாக்கி தொலைபேசிகளையும் ஒட்டு கேட்டார். பாலிவுட் திரை உலகத்தில் சித்துவிளையாட்டை காட்டத்தான் சமீர் வான்கடே கொண்டுவரப்பட்டார். இதன்மூலம் தமது பணியை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கிறார் சமீர் வான்கடே. இவ்வாறு நவாப் மாலிக் கூறினார்.












Click it and Unblock the Notifications