என்னை ஜெயில்ல தள்ளிருவாங்கனு கதறி அழுதார் ஏக்நாத் ஷிண்டே.. ஆதித்ய தாக்கரே பகீர் தகவல்! உண்மையா?
மும்பை : பாஜகவில் சேராவிட்டால் ஜெயிலில் தள்ளி விடுவார்கள் என்று ஏக்நாத் ஷிண்டே எங்கள் வீட்டுக்கு வந்து கதறி அழுதார் என்று சிவசேனா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு ஜூன் மாதம் மகாராஷ்டிரா முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகத் திரும்பி, பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். இதையடுத்து அவர் 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவுடன் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஆனார். உத்தவ் தாக்கரே இந்துத்வா கொள்கையை கைவிட்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் பிரிந்ததாத ஏக்நாத் ஷிண்டே தரப்பு கூறிவருகிறது.

ஆனால், உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே தற்போது ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார். சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு, உத்தவ் தாக்கரே அணியினர் ஏக்நாத் ஷிண்டே அணியினரையும், ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேயையும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வீட்டுக்கு வந்து கதறி அழுதார் : விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆதித்ய தாக்கரே, "சிவசேனாவில் பிளவை ஏற்படுத்துவதற்கு முன்பு ஏக்நாத் ஷிண்டே எங்களது வீட்டுகு வந்து, நான் பாஜக பக்கம் செல்லவில்லை என்றால் என்னை மத்திய விசாரணை அமைப்பு கைது செய்துவிடும் எனக் கூறி கதறி அழுதார். சிறைக்குச் செல்லும் வயதா இது? என்றும் ஏக்நாத் ஷிண்டே அழுதார்" எனப் பேசியுள்ளார்.
மேலும், ஏக்நாத் ஷிண்டே அடிக்கடி காணாமல் போவதாகவும், அவரது பண்ணை வீட்டுக்குச் செல்வதாகவும் ஒரு சில எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். அவர் பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் தருவதாகவும், டெல்லி அல்லது அகமதாபாத்திற்குச் செல்கிறாரா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் எம்எல்ஏக்கள் எங்களிடம் கூறினர் என்றும் ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.
என்னிடமும் அழுதார் : ஆதித்ய தாக்கரேயின் இந்தக் கூற்று உண்மைதான் என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தும் தெரிவித்துள்ளார். "எனது வீட்டுக்கும் ஏக்நாத் ஷிண்டே வந்து இதே கோரிக்கையை முன்வைத்தார். நான் சிறைக்குச் செல்ல விரும்பவில்லை என்று என்னிடம் தெரிவித்தார். நான் அவரிடம், பயப்பட வேண்டாம், தைரியமா இருங்க என்று சொன்னேன். தற்போது ஷிண்டே அணியில் இருக்கும் பல எம்எல்ஏக்கள் மத்திய விசாரணை ஏஜென்சியின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். பாஜக மிரட்டலால் தான் அவர்கள் பிரிந்து சென்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிவசேனா ஷிண்டே அணியின் எம்.எல்.ஏ சந்தோஷ் கூறுகையில், "ஆதித்ய தாக்கரே சொல்வது உண்மை இல்லை. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் கட்சித் தலைமைக்கு எதிராக மாறினோம். பாஜக மூலம் மத்திய விசாரணை ஏஜென்சிகளால் எங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications