Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷிண்டேவுக்கு கல்தா? பாஜக கூட்டணி வென்றால் மகாராஷ்டிரா முதல்வர் இவர் தானா? அமித்ஷா பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியான மகாயுதி வெற்றி பெற்றால் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு பதில் தேவேந்திர பட்னாவிஸை பாஜக முதல்வராக்கலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தற்போது பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.

maharashtra assembly election 2024 amit shah devendra fadnavis 2024

மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார். துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் உள்ளார்.

இதற்கிடையே தான் மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 23ல் ரிசல்ட் வெளியாக உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இங்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணிக்கு மகா விகாஸ் அகாடி என பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசிவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. அதேபோல் இந்த கூட்டணிக்கு பெயர் மகாயுதி என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் தான் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணியும் தற்போது வரை முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் முதல்வர் பதவி மீது ஒன்றுக்கு மேற்பட்ட தலைவர்கள் கண் வைத்துள்ளது தான் இதற்கு முக்கிய காரணம்.

இதற்கிடையே தான் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வென்றால் தேவேந்திர பட்னாவிஸை மீண்டும் முதல்வராக பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இதுதொடர்பான தகவல்கள் தற்போது கசியவிடப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மூத்த பாஜக தலைவர்களும் பாஜக வென்றால் தேவேந்திர பட்னாவிஸை தான் முதல்வராக நியமிக்க வேண்டும் என்பதை ஆதரித்து வருகின்றனர். இதுதொடர்பாக பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த பாஜக தலைவர் ஒருவர்‛‛அடிமட்ட அளவில் வலதுசாரிகள் நாட்டுக்கு பிரதமர் மோடி, ,மகாராஷ்டிராவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் வர வேண்டும்’’ என்று விரும்புவதாக கூறியுள்ளார்.

அதேபோல் கடந்த வாரம் சாங்கிலியில் நடந்த பொதுக்கூட்டத்திலும் மகாராஷ்டிரா மக்கள் மீண்டும் பாஜக மற்றும் பட்னாவிஸை வெல்ல வைக்க நினைக்கின்றனர் என்று கூறினார். இதன்மூலம் பாஜக கூட்டணி வென்றால் தற்போதைய துணை முதல்வராக உள்ள தேவேந்திர பட்னாவிஸை தான் முதல்வர் பதவியில் பாஜக அமர வைக்கும் என்ற பலரும் கூறினர். இத்தகைய சூழலில் தான் தற்போது அமித்ஷா கலந்து பேசி முதல்வர் யார்? என்பது அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதேவேளையில் மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே, ‛‛தற்போதைய சூழலில் முதல்வர் பதவி பற்றி சிந்திக்கும் எண்ணம் எங்களிடம் இல்லை’’ என்று கூறியுள்ளார். அதன்பிறகுமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு அமித்ஷா தனது டோனை மாற்றினார். அப்போது, தற்போது மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணியில் பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளது. சட்டசபை தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு 3 கட்சியினரும் அமர்ந்து பேசி புதிய முதல்வரை தேர்வு செய்வோம்’’ என்று கூறியுள்ளார்.

பட்னாவிஸை முன்நிறுத்தினால் அதிருப்தி உருவாகும் என்பதால் அமித்ஷா தனது டோனை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் கூட மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வென்றால் முதல்வர் பதவியை வைத்து கொள்ள வேண்டும் என்று பாஜக மேலிட தலைவர்கள் விரும்புகின்றனர். இதனால் தற்போதைய முதல்வரான ஏக்நாத் ஷிண்டேவுக்கு ‛கல்தா’ கொடுக்கப்படலாம் என்று அரசியல் வியூகர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் தற்போது பாஜகவுக்கு தான் அதிக எம்எல்ஏக்கள் உள்ளன. ஆனாலும் உத்தவ் தாக்கரேவை விட்டு பிரிந்து வந்த காரணத்தினாலே ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை பாஜக கூட்டணி வென்றால் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி கிடைக்காது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

அதேவேளையில் சிவசேனா தரப்போ, பாஜக கூட்டணி வென்றால் மீண்டும் ஏக்நாத் ஷிண்டே தான் முதல்வராக பொறுப்பேற்பார் என்று கூறி வருகிறது. இதுதொடர்பாக பெயர் சொல்ல விரும்பாத சிவசேனா கேபினட் அமைச்சர் ஒருவர் எங்களை பொறுத்தவரை தான் ஏக்நாத் ஷிண்டே தான் முதல்வர் என்று தெரிவித்துள்ளார்.

இப்படி பாஜக மற்றும் சிவசேனா இடையே முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் போட்டி நிலவி வரும் சூழலில் கூட்டணியில் உள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அமைதி காத்து வருகிறது. இதுபற்றி அந்த கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்கரே,‛‛இப்போது முதல்வர் பதவியை பற்றி பேச வேண்டியது இல்லை. தேர்தலுக்கு பிறகு அதுபற்றி பேசி கொள்ளலாம். இப்போதைக்கு மகாயுதி கூட்டணியை மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் பணி தான் முக்கியம்’’ என கூறியுள்ளார்.


முன்னதாக 2022ல் ஆண்டுகளுக்கு முன்பு உத்தவ் தாக்கரேவிடம் இருந்து எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்தார். பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் இருந்தாலும் கூட ஏக்நாத் ஷிண்டேவின் 41 எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து ஷிண்டேவை முதல்வராக்கியது. அதன்பிறகு அஜித் பவார், சரத்பவாரிடம் இருந்து பிரிந்து வந்து ஆதரவு கொடுத்தார். தற்போது தாக்கரேவிடம் பிரிந்த ஏக்நாத் ஷிண்டேவிடம் தான் சிவசேனா கட்சி பெயர், சின்னம் உள்ளது. அதேபோல் சரத்பவாரிடம் பிரிந்த அஜித் பவாரிடம் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் சின்னம் உள்ளது.

இவர்கள் பாஜகவை நம்பி தங்களின் சொந்த கட்சியை பிரித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் மீண்டும் பாஜக கூட்டணி வெல்லும்போது இருகட்சி தலைவர்களும் முதல்வர் பதவிக்கு உரிமை கோரலாம். பாஜக ஒருவேளை அவர்களுக்கு கொடுக்க மறுத்து தேவேந்திர பட்னாவிசுக்கு வழங்கினால் அவர்கள் அதிருப்தியடைலாம் என்பதால் மகாராஷ்டிரா அரசியல் களம் தேர்தலுக்கு பிறகு இன்னும் பரபரப்பான கட்டத்தை எட்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+