மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஷிண்டே- இடைக்கால முதல்வர்- ஜனாதிபதி ஆட்சி அமல் இல்லை!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய ஆட்சி அமைக்கப்படும் வரை அவரை இடைக்கால முதல்வராக தொடர்ந்து பதவி வகிக்குமாறு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். இதனால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றியது. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைட் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஆனால் புதிய முதல்வர் யார் என்பதில் மகாராஷ்டிராவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்கிறார் ஏக்நாத் ஷிண்டே. பாஜகவோ அதிக இடங்களைப் பெற்றதால் தமது கட்சிக்குதான் முதல்வர் பதவி என்கிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், பாஜகவை ஆதரிக்கிறார்.
இந்த குழப்பங்களுக்கு நடுவே, மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் கட்சி எதுவும் ஆட்சி அமைக்க உரிமை கோராமல், புதிய ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலைமை உருவானது.
இந்த நிலையில் இன்று திடீரென மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அப்போது தமது முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்யும் கடிதத்தைக் கொடுத்தார். இந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், புதிய ஆட்சி அமையும் வரை இடைக்கால முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியில் நீடிக்கக் கேட்டுக் கொண்டார். இந்த நடவடிக்கைகளாள் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்சி அமைப்பது, அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு தொடர்பாக பாஜக தரப்பு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதல்வர் பதவியையே விட்டுக் கொடுத்திருப்பதால் முக்கியமான துறைகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்கிறது ஷிண்டே தரப்பு. அத்துடன் கூடுதலான எண்ணிக்கையில் அமைச்சர்கள் பதவியையும் ஷிண்டே தரப்பு வலியுறுத்துகிறது என்கின்றன மும்பை அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications