”சிவ பெருமானே உங்களை காக்க மாட்டார்” கங்கனம் கட்டி உத்தவ் தாக்கரேவிடம் பகையை தீர்த்த கங்கனா ரனாவத்
மும்பை: அனுமன் சலிசாவுக்கு தடை விதித்த உத்தவ் தாக்கரேவின் ஆட்சியை சிவ பெருமானே காப்பாற்ற மாட்டார் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 288 இடங்களில் பாஜகவுக்கு 106 இடங்கள் கிடைத்தன. பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

அணி தாவல்
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 3 நாட்களில் மட்டும் மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 40 ஆக அவர்களின் பலம் அதிகரித்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 23 ஆம் தேதி அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் யாருக்கு பலம் உள்ளது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம் என சிவசேனா கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார். இந்த நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி ஜூன் 30 மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

உத்தவ் தாக்கரே பதவி விலகல்
ஆளுநரின் நோட்டீசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தனது கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்ட உத்தவ் தாக்கரே, சட்டசபையில் போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

கங்கனா ரனாவத் கருத்து
இதுகுறித்து பாஜக ஆதரவாளரும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் பேசியுள்ள வீடியோவில், "சிவனின் 12 வது அவதாரமாக அறியப்படுபவர் அனுமன். சிவசேனா அனுமன் சலிசா பாடுவதற்கு கூட தடை விதித்தது. சிவபெருமான் கூட அவர்களை காப்பாற்ற மாட்டார்." என்று கூறியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு சிவசேனாவுக்கு எதிராக மும்பையை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய கங்கனா ரனாவத்தின் வீடு இடிக்கப்பட்டது. அப்போது உத்தவ் தாக்கரேவின் பெருமை குலைக்கப்படும் என்று கங்கனா கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications