மும்பையில் மிக மோசமான தீவிபத்து.. தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்.. ஷாக்கிங் வீடியோ
மும்பை: மும்பையின் புறநகர்ப் பகுதியான கஞ்சூர்மார்க்கில் உள்ள சாம்சங் சேவை மையத்தில் ஏற்பட்ட அதிபயங்கர தீ விபத்தை அணைக்கும் முயற்சியில் 8 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன
மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்று கஞ்சூர்மார்க். திங்கள்கிழமை மாலை இங்குள்ள சாம்சங் சேவை மையத்தில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீயானது அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவ, அந்த இடம் முழுவதும் கருமையான புகை சூழ்ந்தது.

கட்டுக்கடங்காமல் எரியும் தீ
இந்தத் தீவிபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் தீயை அணைக்க 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நான்கு தண்ணீர் டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்,

தீயை அணைக்கும் பணிகள்
இது குறித்து டிசிபி பிரசாந்த் கதம் கூறுகையில், "மும்பையின் கஞ்சூர்மார்க் கிழக்கில் உள்ள சாம்சங் சேவை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக இரவு 9 மணியளவில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

தொடர்ந்து நடைபெறுகிறது
10-12 தீயணைப்பு வாகனங்கள் இங்கு உள்ளன. இந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் இங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

என்ன காரணம்
இந்தத் தீவிபத்தில் இதுவரை எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் அல்லது யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்தத் தீ விபத்திற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. இருப்பினும், மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்












Click it and Unblock the Notifications