வலையில் சிக்கிய 157 தங்க மீன்கள்.. ஒரே நாளில் ரூ.1.33 கோடி சம்பாதித்த மீனவர்.. இப்படியொரு அதிர்ஷ்டமா
மும்பை: மகாராஷ்டிராவில் மும்பை அருகே மீனவர் ஒருவர் ஒரே நாளில் 1.33 கோடி ரூபாய் சம்பாதித்து வியப்பை ஏற்படுத்தி உள்ளார். ஒரே நாளில் இவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியை செர்ந்தவர் சந்திரகாந்த் தாரே. மும்பை அருகே இருக்கும் பால்கார் கடல் பகுதியில் இவர் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்.
அங்கு மழை காலத்திற்கு பின் கடந்த ஆகஸ்ட் 28ம் தேடிதான் மீன் பிடிப்பு மீண்டும் அனுமதிக்கப்பட்டது. இதனால் மீண்டும் கடலுக்கு சந்திரகாந்த் மீன்பிடிக்க சென்றார்.

என்ன நடந்தது
மும்பை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் போது திடீரென இவரின் வலை அதிக எடையோடு காணப்பட்டு இருக்கிறது. எப்போதும் பெரிய மீன்கள் சிக்கினால் எப்படி வலை இழுக்குமோ அந்த அளவிற்கு வலை அவரை இழுத்துள்ளது. கஷ்டப்பட்டு வலையை இழுத்து கப்பலுக்குள் போட்டவருக்கு ஷாக்!

அதிர்ச்சி
காரணம்.. அவர் வலையில் சின்ன சின்ன கோல் (ghol) மீன்கள் 157 இருந்துள்ளது. மொத்தமாக ஒரே வலையில் 150 கோல் மீன்கள் மாட்டுவது எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. உலகின் விலை உயர்ந்த மீன்களில் கோல் மீன்களும் ஒன்றாகும். உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் இந்த மீன்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி.

மீன்கள் எப்படி
அதீத மருத்துவ குணம் கொண்ட இந்த மீன்கள் பல்வேறு மருந்துகள், அழகுசாதன பொருட்கள், விலை உயர்ந்த எண்ணெய்கள் தயாரிக்க பயன்படுகிறது. வைன், மதுபானம் தயாரிப்பு, உடலில் தையல் போடுவது, சில உயிர்காக்கும் மருந்துகளில் இந்த மீனின் பாகங்களில் இருந்து எடுக்கப்படும் சாறுகள் பயன்படுத்தப்படுகிறது . இந்தோனேசியா, அமெரிக்கா, தாய்லாந்து, ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளில் இதற்கு ஏகப்பட்ட கிராக்கி.

தங்கம்
இதனால்தான் கோல் மீன்களை தங்க இதயம் கொண்ட மீன்கள் என்றும் வர்ணிக்கிறார்கள். ஆம் இந்த மீன்களை தங்க மீன்கள் (கோல்டு பிஷ் கிடையாது) என்றுதான் பலரும் வர்ணிக்கிறார்கள். இதன் உடல் முழுக்க பல்வேறு பகுதிகள் தங்கம் அளவிற்கு விலை உயர்வானது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அந்த மீனவர் சந்திரகாந்த் கரையில் வந்து ஏலம் விட்டார்.

எவ்வளவு
மொத்தமாக இந்த மீன்கள் எல்லாம் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றது. வெளிநாடுகளில் இருக்கும் பல நிறுவனங்களில் ஒப்பந்ததாரர்கள் மூலம் இவ்வளவு கோடிக்கு இந்த மீன்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணம் இவருக்கு அளிக்கப்படும். திடீரென ஒரே நாளில் 157 மீன்கள் மூலம் இவர் கோடீஸ்வரரான சம்பவம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications