8 மரபணுவில் 39 உருமாற்றம்...மும்பை மருத்துவர்களுக்கு மீண்டும் கடுமையான கொரோனா தொற்று!!
மும்பை: மரபணு மாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் மும்பையில் நான்கு சுகாதாரப் பணியாளர்களை இரண்டாவது முறை பாதித்து இருப்பது தெரிய வந்துள்ளது. முதல் முறை ஏற்பட்ட பாதிப்பை விட இரண்டாவது முறை ஏற்பட்ட வைரஸ் தொற்று பாதிப்பு கடுமையாக இருந்ததாக லான்செட் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சியின் கீழ் வரும் பிஎம்சி மருத்துவமனையில் பனியாற்றி வரும் மூன்று மருத்துவர்கள் மற்றும் இந்துஜா மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒரு சுகாதாரப் பணியாளர் என்று நான்கு பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஒரே நபருக்கு 2வது முறை கொரோனா தாக்கினால்.. உடல்நிலை பாதிப்பு எப்படி இருக்கும்.. வெளியான ஆய்வு முடிவு
மரபணு
இந்த நான்கு பேருக்கும் முதலில் ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இல்லை. ஆனால், மரபணு மாற்றம் செய்து கொண்டு இரண்டாவது முறை பாதித்த வைரஸ் தாக்கம் கடுமையாக இருத்தாக கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று
இதற்கான ஆய்வை ஜெனோமிக்ஸ் அண்ட் இன்டகிரேடிவ் பயாலஜி, ஜெனிடிக் இஞ்சினியரிங் அண்ட் பயோடெக்னாலஜி சர்வதேச மையம் ஆகியவை மேற்கொண்டு இருந்தன. இந்த ஆய்வில் 8 மரபணுக்களில் 39 உருமாற்றம் அல்லது பிறழ்வுகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. முதல் மாதிரியில் இருந்து நான்கு தொற்றுகளும், இரண்டாம் மாதிரியில் இருந்து நான்கு தொற்றுகளும் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிக நாட்கள்
இந்த ஆய்வு குறித்து மருத்துவர்கள் சுஜாதா சுனில் மற்றும் ஜெயந்தி சாஸ்திரி இருவரும் எழுதியுள்ளனர். அதில், ''நான்கு சுகாதாரப் பணியாளர்களுக்கும் இரண்டாவது முறை ஏற்பட்ட தொற்றின் வீரியம் அதிகமாக இருந்தது. முதல் முறை ஏற்பட்ட தொற்று காலத்தையும் விட அதிக நாட்கள் உடலில் நீடித்து இருந்தது.
வைரஸ்
சுகாதாரத் துறையில் முன்னணியில் இருந்து முக்கியப் பணியாற்றுபவர்களுக்கு இந்த தொற்று ஏற்படுவது தவிர்க்க முடியாதது. வைரஸ்களை தனியாக பிரித்து ஆய்வு செய்வதன் மூலமே மரபணு வரிசைகளை உறுதிபடுத்த முடியும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
நுரையீரல்
மருத்துவர் சுஜாதா சுனில் தெரிவித்து இருக்கும் தகவலில், ''இவர்களில் யாருக்கும் மூச்சுத் திணறல் அல்லது நுரையீரலில் தொற்று ஏற்படவில்லை. இதற்குக் காரணம் அவர்களது சிறிய வயது காரணமாக இருக்கலாம். தொடர்ந்து தொற்று ஏற்படுவது பாதிப்பை ஏற்படுத்தலாம். வயதானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டால் மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹாங்காங்
கொரோனா தொற்று பாதித்தவர்களையே மீண்டும் பாதிக்கிறது என்ற செய்தி உலகம் முழுவதிலும் இருந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணம் மரபணு மாற்றம் என்று கூறப்படுகிறது. முதலில் ஹாங்காங்கில் தான் மீண்டும் தொற்று ஏற்பட்டு இருந்தது. மீண்டும் வரும்போது மரபணுவைப் பொருத்து வைரஸின் வீரியமும் மாறுபடுகிறது என்று மருத்துவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தனர். இன்னும் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வில் முழுமையான முடிவுக்கு மருத்துவர்களால் வர முடியவில்லை. இதற்குக் காரணம் மரபணு மாற்றம்.