மும்பை ஹாஜி அலி தர்காவில்.. உலகின் மிக உயரமான கொடிக் கம்பம்! மூவர்ணக் கொடி ஏற்ற உள்ள பிரமதர் மோடி
மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் உலகிலேயே மிக உயரமான தேசியக் கொடிக் கம்பம் நிறுவப்பட உள்ளது
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற இந்தாண்டு உடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தியா முழுக்க நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இந்தச் சூழலில், மும்பையில் உள்ள தர்கா ஒன்றில் உலகிலேயே மிக உயரமான தேசியக் கொடிக் கம்பம் நிறுவப்படத் தேவையான பணிகள் நடந்து வருகிறது.

நரேந்திர மோடி
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் புகழ்பெற்ற புனிதத் தலமான ஹாஜி அலி தர்காவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக உலகின் மிக உயரமான கொடிக்கம்பத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பணிகள் முடிந்த உடன் கொடிக் கம்பத்தைத் திறக்க பிரதமர் நரேந்திர மோடியை அழைக்கவும் தர்கா குழு திட்டமிட்டுள்ளது. 550 ஆண்டுகள் பழமையான இந்த தர்கா தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மிக உயரமான கொடிக் கம்பம்
இப்போது எகிப்தில் 201.952 மீட்டர் உயரத்தில் உள்ள கொடிக் கம்பம் தான் உலகிலேயே மிகவும் உயரமானது ஆகும். உலகிலேயே மிகப் பெரிய கொடிக் கம்பத்தை அமைக்கும் பணி மிக விரைவில் தொடங்கப்படும் என்று தர்கா அறங்காவலர் சோஹைல் கந்த்வானி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "தேவேந்திர ஃபட்னாவிஸ்ஜி முதலமைச்சராக இருந்த போதே இது தொடர்பாக அவரிடம் பேசி இருந்தேன்.

விரைவில் தொடங்கும்
ஹாஜி அலி தர்கா வளாகத்தில் உள்ள உலகின் மிக உயரமான கொடிக்கம்பத்தில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவது அவருக்குப் பிடித்திருந்தது. இது குறித்து புதன்கிழமை மீண்டும் நான் அவரிடம் கேட்டேன். அவரும் மிக உயரமான கொடிக் கம்பத்துக்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். மிக விரைவில் இந்த கொடிக் கம்பம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்" என்றார்.

சுற்றுலா தளம்
மும்பை கடற்கரையிலிருந்து ஒரு தீவில் அமைந்துள்ள இந்த ஹாஜி அலி தர்கா நாட்டின் மிகவும் புனிதமான ஆலயங்களில் ஒன்றாகும். மேலும், இது நகரத்தின் பிரபலமான சுற்றுலா தளமாகவும் உள்ளது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் கூட இந்த தர்காவுக்குச் செல்வது வழக்கம். கடந்த 2020இல் உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட ஆலயங்களில் ஒன்று என்ற கின்னஸ் சாதனையை இது படைத்தது.

75 ஆண்டுகள்
இந்த புனித தளத்திற்குத் தினசரி 50,000 பேர் செல்கின்றனர். குறிப்பாக வியாழன், வெள்ளி, ஞாயிறு நாட்களில் 100,000 பேர் வரை வருகை தருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 'ஹர் கர் திரங்கா' என்ற பிரசாரத்தை முன்னெடுத்தது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications