சிவசேனா தலைவராக மாட்டேன்..ராஜ் தாக்கரே பேச்சால் மகாராஷ்டிரா சிஎம் ஏக்நாத் ஷிண்டே நிம்மதி பெருமூச்சு!
மும்பை: தாம் ஒருபோதும் சிவசேனாவின் தலைவராக மாட்டேன்; மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவராகவே நீடிப்பேன் என ராஜ்தாக்கரே அறிவித்துள்ளது அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பை நிம்மதி அடைய வைத்துள்ளது.
பாஜகவுக்காக சிவசேனாவை உடைத்தவர் ஏக்நாத் ஷிண்டே. தற்போது சிவசேனா பெயரும் சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமே இருக்கிறது. பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவியில் இருக்கிறார் ஷிண்டே. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸை பாஜகவுக்காக உடைத்தவர் அஜித் பவார். அவரும் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா தனி அணியாக லோக்சபா தேர்தலை எதிர்கொண்டுள்ளன.
இந்த நிலையில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே திடீரென டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து பல்வேறு யூகங்கள் எழுந்தன. அதாவது ஏக்நாத் ஷிண்டே வசமுள்ள சிவசேனாவின் தலைவராகப் போகிறார் ராஜ் தாக்கரே. அவரது மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா ஒட்டுமொத்தமாக சிவசேனாவுடன் இணையப் போகிறது என்றெல்லாம் கூறப்பட்டது. இதனால் ஏக்நாத் ஷிண்டே தரப்பு பெரும் அதிர்ச்சியடைந்தது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நவநிர்மான் சேனா பொதுக் கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, நான் சிவசேனாவின் தலைவராகப் போகிறேன் என வெளியாகும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவராகவே நான் நீடிப்பேன். பிரதமர் மோடிக்கு முதன் முதலாக ஆதரவு தெரிவித்தவன் இந்த ராஜ் தாக்கரே. இப்போதும் மோடிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு தருகிறோம்
மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால் மகாராஷ்டிரா நவநிர்மா சேனா தொண்டர்கள் மாநில சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். இவ்வாறு ராஜ்தாக்கரே பேசினார். இதனால் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தற்போதைய நிலையில் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications