எனக்கு ஏதும் தெரியாதே.. பரிதாபமாக சொன்ன சரத் பவார்! அண்ணன் மகனால் பவர்போச்சே - தகிக்கும் மகாராஷ்டிரா
மும்பை: மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் கட்சியாக தேசியவாத காங்கிரஸின் எம்.எல்.ஏக்கள் 30 பேர் அஜித் பவார் தலைமையில் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவளித்த நிலையில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார் அக்கட்சியின் நிறுவனர் சரத் பவார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், தேர்தல் முடிவுக்கு சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. 2019 தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்தபோதே தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பாஜக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் வகையில் நடந்துகொண்டார்.

ஆனால், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு துணை முதலமைச்சர் பதவி பெற்றுக்கொடுத்தா சரத் பவார். உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்று சிவசேனா தலைமையிலான அரசு ஆட்சியமைத்ததில் இருந்தே அக்கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் தொடர்ந்து வந்தது. உத்தவ் தாக்கரேவை கவிழ்க்க அவரது அக்கட்சியின் மூத்த ஏக்நாத் ஷிண்டேவையே வளைத்தது பாஜக.
சிவசேனாவை எம்.எல்.ஏக்களை வளைத்து குஜராத்துக்கு கூட்டி சென்றார் ஷிண்டே. அதன் பின்னர் அசாமுக்கு அந்த எம்.எல்.ஏக்கள் சென்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் சிவசேனா ஆட்சியை பிடிக்க ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.
2024 நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு நடைபெறும் மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி கட்சியையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார் உத்தவ் தாக்கரே. மகாராஷ்டிராவின் முக்கிய கட்சியான தேசியவாத காங்கிரசும் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் உள்ளது.
பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சி நிறுவனர் சரத் பவாரும் கலந்துகொண்டார். இந்த நிலையில் அஜித் பவார் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் 30 பேர் சிவசேனா - பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளார்கள். ஆளுநர் மாளிகைக்கு தேசியவாத காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்களுடன் சென்ற அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராக பதவியேற்று இருக்கிறார். அவருடன் என்சிபி எம்.எல்.ஏக்கள் திலிப் வால்சே பாட்டில், தனன்ஜெய் முண்டே, சகன் புஜ்பால், ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர்.
முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேலுடன் அஜித் பவார் காலை ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அதை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் அஜித் பவார் வீட்டில் நடைபெற்றது. இது தொடர்பாக சரத் பவாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "எதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டது என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக அஜித் பவாருக்கு இக்கூட்டத்தை கூட்ட உரிமை உள்ளது. அடிக்கடி அவர் இப்படி செய்வார்." என்றார். கடைசியில் அவர் கட்சியையே உடைத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications