வருமான வரித்துறையிடம் எனக்கு லவ் லெட்டர் வந்திருக்கிறது.. ஐடி நோட்டீஸ் குறித்து சரத்பவார் கிண்டல்
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சரத்பவார், வருமான வரித்துறை தமக்கு காதல் கடிதம் அனுப்பியுள்ளது என்றார்.
மகாராஷ்டிராவில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏக்கள் பலரும் வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு விசாரணை வளையத்தில் உள்ளனர். இந்த வழக்குகளை காரணம்காட்டியே மகாராஷ்டிரா அரசியலில் சித்து விளையாட்டுகளை மத்திய அரசு அரங்கேற்றுகிறது என்பது பொதுவான விமர்சனம்.
"முகத்தை பார்த்தாலே எல்லாம் தெரிகிறது!" துணை முதல்வரான பட்னாவிஸ்..உண்மையை பளிச் என சொன்ன சரத் பவார்
மகாராஷ்டிராவில் சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி, தற்போது அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மும்பை அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் சஞ்சய் ராவத் ஆஜராகி உள்ளார். கடந்த வாரம் என் தலையையே வெட்டினாலும் இந்த விசாரணைக்குப் போக மாட்டேன்.. முடிந்தால் கைது செய்யட்டும் என கொந்தளித்திருந்தார் சஞ்சய் ராவத்.
மகாராஷ்டிரா ஆட்சி மாற்றம்
இப்போது மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா அதிருப்தி கோஷ்டியின் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகி உள்ளார்.
சரத்பவாருக்கு நோட்டீஸ்
இந்நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2004, 2009 லோக்சபா தேர்தல்கள் மற்றும் 2014, 2020 ராஜ்யசபா தேர்தல்களில் சரத்பவார் போட்டியிட்ட போது தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அந்த பிரமாணப் பத்திரங்களில் இடம்பெற்றுள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க சரத்பவாருக்கு இப்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது வருமான வரித்துறை.
எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்
வருமான வரித்துறை நோட்டீஸ் தொடர்பாக சரத்பவார் கூறியிருப்பதாவது: அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட மத்திய விசாரணை ஏஜென்சிகள் எதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது வெளிப்படையாகவே இப்போதெல்லாம் தெரிந்து விடுகிறது. மகாராஷ்டிரா எம்.எல்.ஏக்கள் பலருக்கும் மத்திய விசாரணை ஏஜென்சிகள் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றன. இந்த புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார்கள்.
ஐடி லவ் லெட்டர்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அமலாக்கப் பிரிவு என்றால் என்ன என்பது பொதுவாக தெரியாது. ஆனால் இப்போது நிலைமை வேறு. சாதாரண கிராமங்களில் கூட உங்களுக்குப் பின்னால் அமலாக்கப் பிரிவு இருக்கிறதா? என கிண்டலடிக்கின்றனர். பல்வேறு அரசியல் காரணங்களுக்காக நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனக்கு கூட வருமான வரித்துறையிடம் இருந்து இது போன்ற லவ் லெட்டர் வந்துள்ளது. 2004 லோக்சபா தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை வைத்து இப்போது விசாரிக்கின்றனராம். இவ்வாறு சரத்பவார் கூறினார்.