மும்பையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
மும்பை: மும்பையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்களில் விடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி வருகிறது.
திமுகவில் சேர்ந்த உடனேயே ஒபிஎஸ்க்கு எதிராக வேலையை காட்டிய தங்க தமிழ்ச்செல்வன்
5-ஆவது நாளாக இன்றும் மழை நீடித்து வருகிறது. இதனால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் கடலோர படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மும்பை, தானே மற்றும் கொங்கன் பகுதிகளில் மழைநீர் தொடர்ந்து தேங்கியிருப்பதால் அங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை, ரயில் சேவை, பேருந்து சேவை ஆகியன முடங்கிவிட்டன. பொதுமக்களும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த மழைக்கு ஏற்கெனவே 18 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு அதி தீவிர மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.