ரூ.33 லட்சம் சம்பளம்.. அமெரிக்க வேலை! இந்திய மாணவருக்கு கிடைத்தும் நழுவிய வாய்ப்பு - என்ன காரணம்?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த சிறுவன் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஆண்டுக்கு ரூ.33 லட்சம் ஊதியத்தில் வேலை பெற்ற நிலையில், தற்போது வேலை வழங்க நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் செயல்பட்டு வரும் விளம்பர நிறுவனம் ஒன்று இணையதள வடிவமைப்பு போட்டியை நடத்தி இருக்கிறது.
இதில் உலகெங்கிலும் இருந்த ஆயிரத்துக்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.

நாக்பூர் மாணவர்
இந்த போட்டியில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த வேதாந்த் தியோகேட் என்ற மாணவரும் இதில் பங்கேற்று இருக்கிறார். இதில் 2 நாட்களில் 2,066 வரிகளை கொண்ட கோடிங்கை எழுதி அவர் வெற்றி பெற்று உள்ளார். வேதாந்தின் அசாத்திய திறமையை பாராட்டி அவருக்கு ஆண்டுக்கு ரூ.33 லட்சம் மாத ஊதியத்தில் வேலை வழங்க அமெரிக்க நிறுவனம் முன்வந்துள்ளது.

வயதால் பறிபோன வாய்ப்பு
இதற்கிடையே வேதாந்திற்கு 15 வயது மட்டுமே ஆகிறது என்பதை அறிந்த அந்த நிறுவனம் அவருக்கு பணி வாய்ப்பை வழங்க மறுப்பு தெரிவித்து இருக்கிறது. அதே நேரம் 10 ஆம் வகுப்பு படித்து வரும் வேதாந்தை ஊக்கப்படுத்தி அந்த நிறுவனம் அவருக்கு அனுப்பிய செய்தியில், "உங்களுடைய அனுபவம், தொழில்முறை மற்றும் அணுகுமுறையை கண்டு நாங்கள் வியந்துள்ளோம்." என்று பதிவிட்டு இருக்கிறார்.

சுயமாக பயிற்சி
வேதாந்தின் பெற்றோர் ராஜேஷ் மற்றும் அஷ்வினி ஆகியோர் நாக்பூர் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தனது படிப்பு போக கிடைக்கும் மீதமுள்ள நேரங்களில் அவர்களுடைய லேப்டாபில் சுயமாக பயிற்சி செய்து மென்பொருளை கற்றிருக்கிறார் மாணவர் வேதாந்த் தியோகேட். அதுதான் அவரை அமெரிக்க வேலை கிடைக்கும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது.

புதிய லேப்டாப் பரிசு
இது குறித்து வேதாந்தின் தந்தை ராஜேஷ் தெரிவிக்கையில், "நாங்கள் இதுகுறித்து எந்த யோசனையும் இல்லாமல் இருந்தோம். திடீரென எங்கள் மகனின் பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. அவர்கள் என்னிடம் இதை தெரியப்படுத்தினார்கள். என் மகன் படித்த பள்ளிதான் அவருக்கு இந்த போட்டியில் பங்கேற்க உதவி இருக்கிறது. நாங்கள் என் மகனுக்கு புதிய லேப்டாப் ஒன்றை வாங்கித் தர இருக்கிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications