இதென்ன டவுன் பஸ்ஸா? நின்னுகிட்டே போக! சீட் இல்லாமல் தவித்த இண்டிகோ விமான பயணி! அடுத்து நடந்த சம்பவம்
மும்பை: மும்பையிலிருந்து வாரணாசி செல்ல இருந்த விமானத்தில், பயணி ஒருவர் சீட் இல்லாமல் நின்று கொண்டிருந்ததால், விமானம் ரன்வேயிலிருந்து திரும்பி பயணியை இறக்கிவிட்டு விட்டு புறப்பட்டு சென்றது.
விமான பயணங்களில் அடிக்கடி சர்ச்சையான நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. அப்படியொரு சம்பவம்தான் நேற்று மும்பையில் நடந்திருக்கிறது. அதாவது, மும்பையில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு அகிலேஷ் சௌபே என்பவர் டிக்கெட் புக் செய்திருக்கிறார். டிக்கெட்டும் கிடைத்திருக்கிறது. திட்டமிட்டபடி நேற்றிரவு விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்.

வழக்கமான பரிசோதனைகள் எல்லாம் முடிவுற்று விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டிருக்கிறார்கள். இண்டிகோவின் 6E 6543 எனும் விமானம் புறப்பட தயாராகியிருக்கிறது. எல்லாம் ஓகே, விமானம் ரன்வேக்கு வந்திருக்கிறது. விமான நிலையத்தின் கண்ட்ரோல் டவரிலிருந்து புறப்படுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. விமானம் கிளம்புவதற்கு சில விநாடிகளுக்கு முன்னர், விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
விமானத்தின் கடைசி இருக்கைக்கு அருகில் ஆண் பயணி ஒருவர் நின்று கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளனர். சரி அவரை சீட்டில் உட்கார வைக்க வேண்டியதுதானே என விமானி கேள்வி எழுப்ப, அவரை உட்கார வைக்க சீட் இல்லையே என்று பணிப்பெண்கள் கூற, விமானம் ரன்வேயிலிருந்து மீண்டும் பயணிகளை ஏற்றும் இடத்திற்கு வந்திருக்கிறது.
அங்கு அந்த பயணியான அகிலேஷை இறக்கிவிட்டுவிட்டு ஒரு மணி நேரம் கழித்து விமானம் புறப்பட்டு சென்றிருக்கிறது. ஒருவேளை இது கவனிக்கப்படாமல் இருந்தால், அகிலேஷ் நின்றுகொண்டே பயணித்திருப்பார். இந்த சம்பவம் விமான பயணிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதென்ன டவுன் பஸ்ஸா நின்றுகொண்டே பயணிக்க? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இண்டிகோ விமானத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பயணி ஒருவர் பெங்களூரிலிருந்து மத்தியப் பிரதேச தலைநகர் போபாலுக்கு போக இண்டிகோ விமானத்தில் ஏறியிருக்கிறார். பின்னர் தனக்கான இருக்கையை கண்டுபிடித்து உட்கார்ந்திருக்கிறார். ஆனால், இவருக்கு வலதுபுற சீட்டில் குஷன் இல்லாமல் இருந்திருக்கிறது.
ஆயிரக்கணக்கில் செலவழித்து விமானத்தில் வந்தால், இப்படி டவுன் பஸ்ஸை போல விமானத்தை வச்சிருக்கீங்களே என்று ஆதங்கப்பட்டு, குஷன் இல்லாத சீட்டை ஃபோட்டோ எடுத்து அந்த பயணி x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவ்வளவுதான் x தளம் மட்டுமல்லாது, பல்வேறு சோஷியல் மீடியா தளத்திலும் இந்த ஃபோட்டோ பகிரப்பட்டு பெரும் விவாதங்கள் உருவாகின. விமான பயணங்களில் ஏற்கெனவே இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. எனவே, இந்த சம்பவங்களினால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள், இந்நாள் பயணிகள் எல்லோரும் இண்டிகோ நிறுவனத்திற்கு எதிராக பொங்கி எழ தொடங்கிவிட்டனர்.
சோஷியல் மீடியாவில் தங்களுக்கு எதிரான கருத்துக்கள் பகிரப்படுவதை கவனித்த இண்டிகோ நிறுவனம், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
"வழக்கமான தூய்மை பணிக்காக இதுபோன்று இருக்கைகளை கையோடு கழற்றி எடுத்து செல்வது வழக்கம். அதேபோலதான் இந்த முறையும் நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட சீட்டை புக் செய்திருந்த பயணிக்கு இது குறித்து ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது" என தெரிவித்திருக்கிறது.
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நெட்டிசன்கள் சிலர், "என்னதான் தூய்மை பணி என்றாலும் கூட ஒரு நியாயம் வேணாமா? விமானம் புறப்படும்போதுதான் தூய்மை பணியை மேற்கொள்வீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இண்டிகோ விமான பயணி ஒருவர், தான் புக் செய்திருந்த சீட்டில் குஷன் இல்லாமல் இருந்ததை கண்டு ஷாக்காகி, நிர்வாகத்திடம் முறையிட்டிருந்தார். இப்படியாக இண்டிகோ விமான நிறுவனம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications