களமிறங்கும் கடல் ராசா!.. கடற்படைக்கு வலு சேர்க்கும் ஐஎன்எஸ் இம்பால்.. இனி நம்ம ராஜ்ஜியம்தான்
மும்பை: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஐஎன்எஸ் இம்பால்' கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
வங்கக்கடல், அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் என மூன்று முக்கிய கடல்களை எல்லையாக கொண்டிருக்கும் இந்தியாவுக்கு கடற்படையை வலுவாக கட்டமைக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் புதிய அப்டேட்களை இந்திய கடற்படை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஐஎன்எஸ் இம்பால் எனும் போர் கப்பலை களத்தில் இறக்கியுள்ளது. சுமார் 163 மீ நீளமும், 7,400 டன் எடையும் கொண்ட இந்த கப்பல் நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

நாட்டின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள நகரத்தின் பெயரை இந்த கப்பலுக்கு சூட்டியுள்ளதன் மூலம் நாட்டின் ஒற்றுமையை இந்திய கடற்படை வெளிப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கப்பலின் சிறப்பம்சமே இதில் இருக்கும் சூப்பர் சோனிக் ஏவுகணைதான். மணிக்கு 1,236 கி.மீ வேகத்தில் சென்னு இந்த ஏவுகணைகள் இலக்கை தாக்கும்.
இந்த கப்பலின் கட்டுமானத்தில் 75 சதவிகிதம் உள்நாட்டு பொருட்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் நீர்மூழ்கி கப்பலை தாக்கும் வகையில் ஏவுகணைகள் இருப்பதால் கடல் பரப்பில் இந்த கப்பலை தாண்டி எதுவும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முடியாது. நம்ப முடியாத குறைந்த காலத்தில் இந்த போர் கப்பல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு, இந்த கப்பலை கட்டும் பணிகள் தொடங்கின.
இரண்டு ஆண்டுகளில் 2019ம் ஆண்டில் கப்பலின் முழு கட்டுமானமும் முடிக்கப்பட்டு சோதனைக்காக கடலில் இறக்கப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு தொழில்நுட்பமாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில், விடுதலைக்காக போராடிய மணிப்பூர் மக்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் இம்பால் எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
சமீப காலமாக சீனாவின் உளவு கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் கடும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. எனவே இதற்கு முடிவுகட்ட இந்தியா தனது கடற்படையின் பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி வருகிறது. இதன் வெளிப்பாடாகத்தான் ஐஎன்எஸ் இம்பால் இருக்கிறது. இந்த கப்பல் இன்று மும்பையில் உள்ள கடற்படை தளத்திலிருந்து பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார்.












Click it and Unblock the Notifications