டூல்கிட் வழக்கில் திருப்பம்.. வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப்பை கைது செய்ய 3 வாரங்கள் தடை- மும்பை ஹைகோர்ட்
மும்பை: டூல்கிட் வழக்கில் மூன்று வாரங்களுக்கு வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப்பை கைது செய்யக்கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர், கிரெட்டா துன்பெர்க் பகிர்ந்து கொண்ட ஆன்லைன் ஆவணம், அதாவது "டூல்கிட்" எடிட் செய்யப்பட்டு திஷா ரவி, நிகிதா ஜேக்கப், சாந்தனு முலுக் போன்றோர் ஷேர் செய்ததாக டெல்லி சைபர் கிரைம் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். நிகிதா ஜேக்கப்புக்கு எதிராக டெல்லியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சர்ச் வாரண்ட்டுடன், டெல்லி போலீசார் மும்பையிலுள்ள நிகிதா வீட்டுக்கு சென்று ரெய்டு நடத்தினர். ஆனால் அங்கு நிகிதா இல்லை என்பதால் அவரை கைது செய்ய முடியவில்லை. முன்னதாக பெங்களூரில், திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்தான், டெல்லி காவல்துறை தனக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதால், டெல்லி நீதிமன்றம் சென்று முன் ஜாமீன் பெறுவதற்குள் தன்னை கைது செய்துவிட கூடாது. 4 வாரங்கள் சட்டப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி நிகிதா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி காவல்துறை சார்பில் நிகிதாவை கைது செய்வதற்கு தடை விதிக்க கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
டெல்லி செங்கோட்டை கலவர வழக்கு தொடர்பான பிரச்சினை இது என்பதால் மிகவும் சீரியஸ் விவகாரம். எனவே அவரிடம் விசாரணை நடத்தி தேவை உள்ளது. எனவே கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நிகிதா தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறார். எனவே கைது செய்ய தேவையில்லை என்று அவர் சார்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், 3 வாரங்கள் கைது செய்ய டிரான்சிட் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண் திஷா ரவியை தேசத்துரோக வழக்கில் கைது செய்வதா? வைகோ கண்டனம்
ஒருவேளை அவரை கைது செய்தால், 25000 மதிப்புள்ள ஜாமீன் பிணைத்தொகையின்பேரில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மும்பை உயர் நீதிமன்றம். டோல்கேட் வழக்கில் இது ஒரு முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்த தடை உத்தரவையடுத்து, டெல்லி நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் மனுவை நிகிதா தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நபருக்கு எதிராக வேறு மாவட்டத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருந்தால் அங்கே செல்லும் வழியில் அவர் கைது செய்யப்படலாம் என்று அச்சம் இருந்தால், அதைத் தவிர்ப்பதற்காக, நீங்கள் உரிய நீதிமன்றத்தை அணுகும் வரை கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பைக் கோரி உங்கள் பகுதியில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் டிரான்ஸிட் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியும். அப்படித்தான் நிகிதா இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.