மாற்றுத்திறனாளிகள் மூலம் இயங்கும் கஃபேவுக்கு.. நேரில் வந்து திருமண அழைப்பிதழ் வைத்த அதானி மகன்
மும்பை: மும்பை விமான நிலையத்தில் 'மிட்டி கஃபே' இயங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் மூலம் இயங்கி வரும் இந்த கஃபேவுக்கு வந்த அதானியின் மகன் ஜீத் அதானி, தனது திருமணத்திற்கான அழைப்பிதழை கஃபேவின் உரிமையாளருக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த காலத்தில் தொழில் தொடங்குவது என்பது சவாலான விஷயம். அதை தொடர்ந்து நடத்துவது என்பது அதைவிட சவாலான விஷயம். ஆனால் இந்த சவால்களை எதிர்கொண்டு, மிட்டி கஃபே சிறப்பாக இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் மாற்று திறனாளிகள்தான். மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இந்த கஃபே இயங்கி வருகிறது. இதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம், அவர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த கஃபேவை அலினா ஆலம் என்பவர் நடத்தி வருகிறார். அதானியின் இளைய மகனான ஜீத் அதானிக்கு இந்த கடை மீதும், அதன் நிறுவனர் மீதும் மிகுந்த நன்மதிப்பு இருக்கிறது. காரணம், மாற்றுத்திறனாளிகளின் வெற்றிப்பாதையை நோக்கி இந்த கஃபே நகர்த்துகிறது. வணிகத்தில் இருக்கும் சிக்கல்களை தாண்டி, கஃபே தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருகிறது. விடாமுயற்சி, தன்னம்பிக்கையின் அடையாளமாக இந்த கஃபேவை ஜீத் கருதுகிறார்.

இந்நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இந்த கஃபேவுக்கு, தனது வருங்கால மனைவி திவா ஜெய்மின் ஷாவுடன் நேற்று வருகை தந்திருந்த ஜீத் அதானி, கஃபேவின் நிறுவனருக்கும், அதன் ஊழியர்களுக்கும் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். பிப்.7ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் இவர்களது திருமணம் நடைபெறுகிறது.

கஃபேவில் நடந்த சந்திப்பில் ஊழியர்களுடன் ஜீத் அதானி மற்றும் திவா கேக் வெட்டி கொண்டாடினர். கஃபே சார்பாக வருங்கால தம்பதியினருக்கு பரிசுகளும், பூங்கொத்தும் வழங்கப்பட்டிருக்கிறது.

மிட்டி கஃபே தொடங்கப்பட்டதிலிருந்து, அதற்கு ஜீத் அதானி தொடர்ந்து ஆதரவளித்து வந்திருக்கிறார். இன்று நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மிட்டி கஃபே பல கிளைகளை உருவாக்கியிருக்கிறது. அங்கும் ஏராளமான மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications