இதுதான் காதல்! ரூ 20-க்கு தங்க தாலி செயின் வாங்கிய 93 வயது முதியவர்! கடை ஓனருக்கு குவியும் பாராட்டு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், சம்பாஜி நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் தன்னுடைய மனைவிக்கு தங்கத்தில் தாலி வாங்க வெறும் 1120 ரூபாயுடன் வந்த 93 வயது முதியவரின் வெகுளித்தனத்தை புரிந்து கொண்ட நகைக்கடைக்காரர் வெறும் 20 ரூபாயை மட்டும் வாங்கிக்கொண்டு அவர் கேட்ட நகையை கொடுத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் அம்போரா ஜஹாங்கீர் கிராமத்தை சேர்ந்தவர் நிவ்ருத்தி ஷிண்டே (93). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடையது வறுமையில் வாடும் குடும்பம்.

இவருடைய மனைவி சாந்தாபாய். தற்போது ஆஷாதி ஏகாதசி ஜூலை 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்காக இருவரும் பந்தர்பூருக்கு கால்நடையாகவே யாத்திரை மேற்கொண்டனர்.
அப்போது சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள நகைக்கடைக்கு சென்றனர். வெள்ளை குர்தா, தொப்பி அணிந்தபடி மிகவும் எளிமையாக இருந்த அவரையும் அவரது மனைவியையும் பார்த்த கடைக்காரர்கள் யாசகம் கேட்டு வந்ததாக கருதினர்.
தாலி சங்கிலி
ஆனால் அந்த முதியவர் தனது மனைவிக்கு தாலி சங்கிலி வாங்க வந்ததாக கூறியதை அடுத்து கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். எப்படியும் அவர் விலையை கேட்டுவிட்டு வெளியே போய்விடுவார் என கடை ஊழியர்கள் நினைத்து அவரை உள்ளே அழைத்தனர்.
கடைக்காரர்கள்
அப்போது அவரிடம் கடைக்காரர்கள் எத்தனை பவுனில் எத்தனை ரூபாயில் தங்க சங்கிலி வேண்டும் என்றனர். அதற்கு அந்த முதியவரோ அப்பாவித்தனமாக ரூ 1120 கொடுத்து தங்க சங்கிலி வேண்டும் என கேட்டார். அதாவது அவருக்கு தங்கம் விற்கும் விலை தெரியவில்லை. அந்த காலத்தில் என்ன விலைக்கு இருந்ததோ அதே விலைக்கு இப்போதும் இருக்கும் என நினைத்து வந்திருப்பார் போல!
ரூ 1120-க்கு தாலி சங்கிலியா
இதனால் கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 1120 ரூபாய்க்கு ஒரு கால் கிராம் கூட வாங்க முடியாதே. இவர் என்னவென்றால் நிச்சயம் ஒரு பவுனுக்கு மேல் இருக்கும் தங்க சங்கிலியை கேட்கிறாரே என கருதினர்.
கடை உரிமையாளர்கள்
இதையெல்லாம் அங்கிருந்த கடை உரிமையாளர் பார்த்தார். இந்த தள்ளாத வயதிலும் முதியவரின் ஆழமான இந்த காதலைக் கண்டு அசந்த கடை உரிமையாளர், அவர்கள் தேர்வு செய்த நகையை அவருக்கே கொடுத்தார். பதிலுக்கு ரூ 1120 நோட்டுக்களை முதியவர் நீட்டினார்.
ரூ 20 மட்டும் போதும்
உடனே கடை உரிமையாளர் அதிலிருந்து ஒரு 20 ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு, அந்த தம்பதியிடம் ஆசி பெற்றார். இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில் கடைக்கு வந்த அந்த வயதான தம்பதி, 1120 ரூபாய் கொடுத்து தங்கத்தில் தாலி சங்கிலி வேண்டும் என்றனர்.
ஆச்சரியப்பட வைத்த அன்பு
அவர்களது அன்பு என்னை ஆச்சரியப்பட வைத்தது. ஆசிர்வாதத்தின் அடையாளமாக நான் அவரிடம் இருந்து ரூ 20 பெற்றுக் கொண்டு நகையை கொடுத்தேன் என்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
கடை உரிமையாளருக்கு பாராட்டுகள்
இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த கடை உரிமையாளரை பாராட்டி வருகிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சவரனில் தாலி செயின் எடுத்திருந்தால் கூட கிட்டதட்ட ரூ 75 ஆயிரத்திற்கு ஆகும். இதில் செய் கூலி, சேதாரம் சேர்த்தால் எங்கேயோ போகும். ஆனால் இவர்களது ஆழமான காதலுக்காக தனக்கு நஷ்டமானாலும் பரவாயில்லை என கருதி வெறும் 20 ரூபாயை பெற்றுக் கொண்டு தாலி சங்கிலியை கொடுத்த உரிமையாளரை என்னவென பாராட்டுவது!












Click it and Unblock the Notifications