பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு புகழாரம்- என்.ஐ.ஏ. ஆட்சேபனையால் வாபஸ் பெற்றார் மும்பை நீதிபதி ஷிண்டே
மும்பை: எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக பாதிரியாரும் சமூக செயல்பாட்டாளருமான ஸ்டான் சுவாமிக்கு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஷிண்டே புகழாரம் சூட்டியிருந்தார். ஆனால் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) எதிர்ப்பு தெரிவித்ததால் தமது கருத்தை நீதிபதி ஷிண்டே திரும்பப் பெற்றார்.
2018-ல் மகாராஷ்டிராவின் பீமாகோரேகான் வன்முறைக்கு எல்கர் பரிஷத் நடத்திய நிகழ்ச்சிதான் காரணம் என்பது என்.ஐ.ஏ. குற்றச்சாட்டு. இதனால் எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 83 வயதான பாதிரியார் ஸ்டான் சுவாமியும் ஒருவர்.
தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த ஸ்டான் சுவாமி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்காகப் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த முதியவரான ஸ்டான் சுவாமி தமக்கு ஜாமீன் வழங்க கோரியும் சிகிச்சை அளிக்கக் கோரியும் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது ஜாமீன் மனு அப்போது கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்தார்.

ஸ்டான் சுவாமிக்கு புகழாரம்
ஸ்டான் சுவாமியின் மரணம் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே எல்கர் பரிஷத் வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் தேசாயிடம் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஷிண்டே ஸ்டான் சுவாமி தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். நீதிபதி ஷிண்டே கூறுகையில், ஸ்டான் சுவாமியின் இறுதி நிகழ்ச்சியை இணையத்தில் நேரடியாகப் பார்த்தோம். ஸ்டான் சுவாமி உன்னதமான மனிதர்.

பேச்சுவரவில்லை
பழங்குடி மக்களுக்கு சிறந்த சேவையாற்றியவர். நீதிமன்ற தடுப்புக் காவலில் மறைந்த ஸ்டான் சுவாமியின் பணிகளுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். ஸ்டான் சுவாமியின் மரணத்தால் நாங்கள் பேசமுடியாமல் இருக்கிறோம்.

எங்களுக்குள் எழுந்த கேள்வி
ஸ்டான் சுவாமி மனு மீது எங்களால் ஏன் தீர்ப்பு கூற முடியாமல் போனது என்பதுதான் எங்களுக்குள் எழுந்த கேள்வி. இதுபற்றி நாங்கள் இப்போதும் எதுவுமே கூற முடியாது. எங்களது நிலைமையை புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

கருத்தை வாபஸ் பெற்றார்
அதாவது ஸ்டான் சுவாமியின் ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதற்கு என்.ஐ.ஏ தான் காரணம் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார் ஷிண்டே. இதனையடுத்து நீதிபதி ஷிண்டேவின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது என்.ஐ.ஏ. இதனால் நீதிபதி ஷிண்டே தமது கருத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.

மனிதர்கள்தானே..
இது தொடர்பாக என்.ஐ.ஏ. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில்சிங்கிடம் கூறிய நீதிபதி ஷிண்டே, என்.ஐ.ஏ.வுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கில் உள்ள சட்ட ரீதியான அம்சங்களைத்தான் தெரிவித்தேன். ஒருவேளை எங்கள் கருத்துகள் உங்களை காயப்படுத்திருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். என்னுடைய கருத்துகளை திரும்பப் பெறுகிறேன். நாங்கள் பொதுவாக கருத்துகள் தெரிவிப்பது இல்லை. இருந்தாலும் நாங்களும் மனிதர்கள்தான்.. சில நேரங்களில் இப்படி நிகழ்ந்துவிடுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications