லென்ஸ்கார்ட் ஊழியர்களுக்கு திலகம் வைத்த பாஜக நிர்வாகி.. பெரிதாக வெடிக்கும் பாலிசி சர்ச்சை!
மும்பை: தேசியளவில் லென்ஸ்கார்ட் விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. அதாவது லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் ஊழியர்களுக்குப் பொட்டு வைக்கவும், கையில் காப்பு காட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் கிளம்பின. இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், பாஜக தலைவர் ஒருவர் லென்ஸ்கார்ட் கடைக்குள் சென்று அங்கிருந்த ஊழியர்களுக்குக் கட்டாயப்படுத்தி திலகம் வைத்திருக்கிறார்.
இந்தியாவின் மிக முக்கிய கண்ணாடி நிறுவனங்களில் ஒன்றாக லென்ஸ்கார்ட் இருக்கிறது. நாடு முழுக்க லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் பல்வேறு கிளைகள் உள்ளன. இந்தச் சூழலில் தான் லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான ஆடை மற்றும் க்ரூமிங் விதிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. அதுவே இந்த ஒட்டுமொத்த பிரச்சினையையும் தொடங்கி வைத்தது.

சர்ச்சை
அதில் ஊழியர்கள் திலகம் இடுவதற்கோ, பொட்டு வைப்பதற்கோ அல்லது கையில் காப்பு கட்டுவதற்கோ தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே, ஹிஜாப் போன்ற மற்ற மத அடையாளங்களுக்கு அங்கே கட்டுப்பாடு இல்லை என்று நெட்டிசன்கள் சிலர் பதிவிடவே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் 'Boycott Lenskart' முழக்கங்களும் எழுந்துள்ளது. இது இணையத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திலகமிட்டு எதிர்ப்பு
இதற்கிடையே மும்பையில் பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி நாஜியா இலாஹி கான், ஒரு லென்ஸ்கார்ட் கிளைக்குள் புகுந்து அங்கிருந்த மேலாளர் மொஹ்சின் கானிடம் இது குறித்து கேள்வி கேட்டார். அவர் மேலும், "நீங்கள் ஒரு முஸ்லிம் என்பதால் தான் மற்றவர்களைத் திலகம் இட விடாமல் தடுக்கிறீர்களா?" என கேட்டதுடன், அங்கிருந்த இந்து ஊழியர்களுக்கு வலுக்கட்டாயமாகத் திலகம் இட்டு தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். இதேபோன்ற சம்பவங்கள் போபாலிலும் அரங்கேறின.
அங்கே இந்து உற்சவ் சமிதி அமைப்பினர் ஸ்டோர்களில் புகுந்து ஊழியர்களுக்குக் காப்புக் கட்டி, மந்திரங்களையும் கூறினர்.. சில இடங்களில் லென்ஸ்கார்ட் கண்ணாடிகளை உடைக்கும் சம்பவங்களும் நடந்ததாக கூறப்படுகிறது.. இந்தச் சர்ச்சை வலுக்கத் தொடங்கியதும், முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்கள் சிலர் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். புனேவைச் சேர்ந்த ஒரு முன்னாள் மேலாளர், தனது கிளையில் ஊழியர்கள் காப்புக் கட்டியிருந்த காரணத்தால் ஆடிட் புள்ளிகள் குறைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். மற்றொருவர், இந்த விதிமுறையை எதிர்த்ததால் தான் வேலையை இழக்க நேரிட்டதாகத் தெரிவித்தார்.
விளக்கம்
நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, லென்ஸ்கார்ட் சிஇஓ பியூஷ் பன்சால் விளக்கம் அளித்துள்ளார்.. அதில் அது ஒரு பழைய ஆவணம் என்றும், அது நிறுவனத்தின் தற்போதைய அதிகாரப்பூர்வ எச்.ஆர் பாலிசி அல்ல என்றும் அவர் தெரிவித்தார். மேலும், நிறுவனம் தனது குரூமிங் வழிகாட்டியை உடனடியாக மாற்றியமைத்தது. திலகம், பொட்டு, காப்பு, ஹிஜாப், தலைப்பாகை என அனைத்து விதமான மத அடையாளங்களும் அனுமதி உண்டு எனப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நெட்டிசன்கள்
இது பெரிய விஷயமாக மாறியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு நிறுவனத்தின் உள்விதிமுறைகள் தனிநபர் மத உணர்வுகளைக் காயப்படுத்தும்போது கேள்விகள் எழத் தான் செய்யும் என்று சிலர் பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர், அந்த விதிகளுக்கும் மேலிட முடிவுகளுக்கும் சம்பந்தமில்லாத கடைநிலை ஊழியர்களைத் தனிப்பட்ட முறையில் மிரட்டுவது மற்றும் மத ரீதியான முரண்பாடுகளைத் தூண்டுவது தீர்வாகாது என்று பதிவிட்டு வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications