தியாகம்.. அப்பாவிற்காக எம்எல்ஏ பதவியை துறக்க தயாராகும் ஆதித்யா தாக்கரே?.. என்ன பின்னணி?
பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து மகாராஷ்டிராவின் முதல் முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வாகி உள்ளார்.
Recommended Video
மும்பை: உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யா தாக்கரேவின் வோர்லி தொகுதியில் இன்னும் 6 மாதத்தில் எம்எல்ஏ இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆதித்யா தாக்கரே தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே அங்கு முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார். நேற்று இரவு அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியில் இருந்து பட்னாவிஸ் பதவி விலகினார். அதேபோல் அஜித் பவாரும் துணை முதல்வர் பதவியில் இருந்து பதவி விலகினார்.
உத்தவ் தாக்கரே இன்னும் 6 மாதத்தில் இவர் தேர்தலில் நின்று எம்எல்ஏவாக வெற்றிபெற வேண்டும். அவர் இப்போது எம்எல்ஏ இல்லை. இதையடுத்து உத்தவ் தாக்கரே யாருடைய தொகுதியில் போட்டியிடுவார். அவருக்காக எம்எல்ஏ பதவியை யார் ராஜினாமா செய்வார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. சிவசேனா கட்சிக்கு 54 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது. அதில் பல எம்எல்ஏக்கள் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவிற்காக உயிரை கூட கொடுப்பார்கள்.
பல வருடமாக இவர்கள் கட்சியில் மிக முக்கியமான உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உத்தவ் தாக்கரேவிற்கு வழி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் உத்தவ் தாக்கரே வோர்லி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
ஆதித்யா தாக்கரே அங்குதான் தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். வோர்லி தொகுதி சிவசேனா கட்சிக்கு மிகவும் நெருக்கமான தொகுதி. முதல் தாக்கரே குடும்ப உறுப்பினர் (ஆதித்யா) எம்எல்ஏ ஆனது இந்த தொகுதியில் இருந்துதான் என்பதால் இது கூடுதல் சிறப்பை பெறுகிறது.
அதேபோல் வோர்லி தொகுதி உத்தவ் தாக்கரேவின் அப்பா பால் தாக்கரேவிற்கும் மிகவும் நெருக்கமான இடமாகும். அங்கு பால் தாக்கரே பலமுறை பிரச்சாரங்களை செய்துள்ளார். அங்கு ஆதித்யாவை போட்டியிட சொன்னதே உத்தவ்தான். அதனால் ஆதித்யா தாக்கரேவை ராஜினாமா செய்ய வைத்து அவரின் வோர்லி தொகுதியில் உத்தவ் போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்க உள்ளதால் கட்சிக்குள் நிறைய பணிகள் பாதிக்கும். இதனால் கட்சி பணிகளை ஆதித்யா தாக்கரே கவனிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆம் ஆதித்யா தாக்கரே இன்னும் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில்தான் இருக்கிறார்.
அதனால் அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மொத்தமாக கட்சி பணிகளை கவனிக்க சென்றுவிடுவார் என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் ஆதித்யா தாக்கரே விரைவில் சிவசேனாவின் செயல் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.