அலறும் சரத்பவார்- மகாராஷ்டிராவில் 13 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு தாவும் என்சிபி அஜித் பவார்?
மும்பை: மகாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபடுவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றன. சரத்பவாரின் உறவினரான அஜித் பவார் 13 என்சிபி எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு தாவ இருப்பதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

மகாராஷ்டிராவில் 2019-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக 105; சிவசேனா 63; சரத்பவாரின் என்சிபி 41; காங்கிரஸ் 44 இடங்களில் வென்றன. முதல்வர் பதவி விவகாரத்தில் சிவசேனா, பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கால் நூற்றாண்டுகால சிவசேனா- பாஜக உறவு முறிந்தது. அப்போது சரத்பவாரின் என்சிபி கட்சியை பாஜக தம் பக்கம் இழுக்க முயற்சித்தது. சரத்பவாரின் உறவினரான அஜித் பவாரும் பாஜக பக்கம் போனார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்; அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். ஆனால் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்துக்குப் போனதால் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து சிவசேனா தமது பரம எதிரிகளான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸுடன் இணைந்து புதிய கூட்டணி அமைத்தது. அப்போதே அஜித்பவார் என்சிபிக்கும் திரும்ப்விட்டார். முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. பாஜகவோ சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மெஜாரிட்டி எம்.எல்.ஏக்களை இழுத்து உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்தது. தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராகி உள்ளார். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜக இணைந்து புதிய ஆட்சி நடைபெறுகிறது.
இந்தப் பின்னணியில் சிவசேனாவை உடைத்தது போல சரத்பவாரின் என்சிபியையும் சிதறவிட முடிவு செய்துள்ளது பாஜக. இப்போதும் அஜித் பவாரை அரவணைக்க தயாராகிவிட்டது பாஜக. அஜித் பவார் 2019-ல் சிங்கிள் எம்.எல்.ஏ.வாகத்தான் பாஜக பக்கம் போனார். இப்போது 13 எம்.எல்.ஏக்களை இழுத்துக் கொண்டு பாஜக பக்கம் ஓடப் போகிறாராம். ஆனால் சரத்பவாரோ, அப்படி எல்லாம் கட்சிக்கு துரோகம் செய்தால் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரித்திருந்தார். இந்த விவகாரம்தான் இப்போது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications