பாஜகவுக்கு 144... சிவசேனாவுக்கு 126... உத்தவிடம் இறங்கி வந்த அமித்ஷா
Recommended Video
மும்பை: மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக 144 இடங்களிலும், சிவசேனா 126 இடங்களிலும் போட்டியிடுகிறது.
மஹாராஷ்டிராவில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நிலையில், அந்த இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக்கொள்வோம் என பாஜகவிடம் சிவசேனா வலியுறுத்தி வந்தது.
சிவசேனா வைத்த கோரிக்கையை ஏற்க பாஜக தயக்கம் காட்டியதால், ஒரு கட்டத்தில் கூட்டணியில் விரிசல் ஏற்படும் அளவுக்கு நிலைமை சென்றது. சிவசேனாவை கூட்டணியில் தக்க வைக்க விரும்பிய மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரேயின் தேவையை தலைமைக்கு புள்ளி விவர பட்டியலுடன் எடுத்துரைத்தார்.
இதையடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றி சற்று இறங்கி வந்த அமித்ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடித்துள்ளார். மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 144 இடங்களிலும், சிவசேனா 126 இடங்களில் போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.
ஆனால், பாஜக ஆட்சி அமைந்தால் துணை முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து உத்தவ்தாக்கரே பின்வாங்கவில்லை. இதனால் வேறுவழியின்றி அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது பாஜக.