மகாராஷ்டிரா: சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையேயான அதிகாரப்பூர்வமான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி செப்டம்பர் 20 வரை இந்த பேச்சுவார்த்தை நடைபெறும். இதனையடுத்து 3 கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு விவகாரம் அறிவிக்கப்பட இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்பது எதிர்பார்ப்பு. இதனால் இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை எப்போது அறிவிக்கும் என காத்திருக்கின்றன அரசியல் கட்சிகள். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஏற்கனவே நவம்பர் 2-வது வாரத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் களத்தில் மோதுகிற ஆளும் மகாயுதி மற்றும் மகா விகாஸ் அகாடி ஆகிய கூட்டணிகள் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக இறங்கிவிட்டன. மகாயுதி கூட்டணியில் ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் காங்கிரஸுக்கான இடங்கள் குறித்து பாஜக ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்திய போது இவ்வளவுதான் இடம் என உறுதி செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதன்படி பாஜக 140 முதல் 150 இடங்கள், ஷிண்டே சிவசேனா 80; அஜித்பவார் என்சிபி 55 இடங்களில் போட்டியிடக் கூடும்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் அகாடியும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளான உத்தவ் தாகரே சிவசேனா, சரத்பவார் என்சிபி மற்றும் காங்கிரஸ் இடையே இன்று அதிகாரப்பூர்வ கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை செப்டம்பர் 20-ந் தேதி வரை நடைபெறும். இதனையடுத்து தொகுதிப் பங்கீட்டு விவரங்கள் அறிவிக்கப்படும். இதனால் மகாராஷ்டிராவில் தேர்தல் களம் ஜரூராகிக் கொண்டிருக்கிறது.
2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனாவுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைக்க முயற்சித்தது. ஆனால் அது தோல்வியில் முடிவடைய காங்கிரஸ், என்சிபியுடன் சிவசேனா கைகோர்த்து ஆட்சியை அமைத்தது. உத்தவ் தாக்கரேவின் இந்த ஆட்சியை சிவசேனாவை இரண்டாக உடைத்து கவிழ்த்தது பாஜக.












Click it and Unblock the Notifications