மகாராஷ்டிரா.. ஆட்சி அமைத்தாலும் துறைகள் ஒதுக்கீட்டால் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி- ஷிண்டே அடம்!
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்ற போதும் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் உள்துறையை தமக்கு ஒதுக்கியாக வேண்டும் என்பதில் சிவசேனா தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே பிடிவாதமாக இருப்பதால் இந்த இழுபறி தொடருகிறது. மகாராஷ்டிராவில் வரும் 11-ந் தேதி அல்லது 12-ந் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என்கின்றன அம்மாநில அரசியல் வட்டாரங்கள்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாயுக்தி கூட்டணி புதிய ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது. இந்த இழுபறியுடன் முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்களாக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸின் அஜித்பவார் பதவியேற்றனர்.

இதனையடுத்து 15-வது மகாராஷ்டிரா சடசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் மகாயுக்தி கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பதவியேற்க மறுத்தனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்திலும் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர் பதவியை ஏற்க மறுத்து வந்த சிவசேனா தலைவர் ஷிண்டே, பிரதமர் மோடியின் தலையீட்டால் அந்த பதவியை ஏற்றுக் கொண்டார். ஆனால் தற்போது தமக்கு உள்துறை இலாகாதான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதில் ஷிண்டே உறுதியாக நிற்கிறார்.
கடந்த ஆட்சியில் துணை முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் வசம், உள்துறை இருந்தது; அதே பார்முலாவை தற்போதும் செயல்படுத்த வேண்டும் என்பது ஏக்நாத் ஷிண்டேவின் கருத்து. ஆனால் இதனை பாஜகவோ திட்டவட்டமாக ஏற்கவே முடியாது என்கிறது. அதேபோல மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைக்க எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத தமக்கு முக்கியமான துறைகளை ஒதுக்கியாக வேண்டும் என அஜித்பவாரும் பாஜக மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இரு கட்சிகளும் கடும் நெருக்கடி கொடுப்பதாலேயே அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை. இது தொடர்பாக மூன்று கட்சிகளிடையே இடைவிடாத பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இன்று இரவுக்குள் தெளிவான முடிவுகள் வெளியாகும் என்றும் வரும் 11-ந் தேதி அல்லது12-ந் தேதி அமைச்சரவை விரிவாக்கம் இடம் பெறலாம் என்றும் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications