"ஃபட்னாவிஸ் vs ஷிண்டே.." மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் யார்? இன்று வெளியாகும் மேஜர் முடிவு!
மும்பை: மகாராஷ்டிராவில் நேற்றைய தினம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைப்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம் முதல்வர் யார் என்பதில் கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான இறுதி முடிவை இன்று பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி இணைந்து இன்று எடுக்கும் என்று தெரிகிறது.
மகாராஷ்டிரா நமது நாட்டில் உள்ள மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் பொருளாதாரத்திற்கும் முக்கிய பங்களிப்பைத் தரும் மகாராஷ்டிராவில் நேற்றைய தினம் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானது.

கடந்த 5 ஆண்டுகள் அங்கு உறுதியான அரசு இல்லாமல் இருந்த நிலையில், இந்த முறை பாஜக கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அங்கு வலுவான அரசு அமையும் சூழல் உருவாகியுள்ளது.
எக்ஸிட் போல் முடிவுகளில் கடும் போட்டி இருக்கும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அதைப் பொய்யாக்கும் வகையில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பல தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது. ஆரம்பத்தில் தொடங்கிய இந்த டிரெண்ட் கடைசி வரை அங்குத் தொடர்ந்தது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சீட்கள் உள்ளது. அதில் 145 சீட்களில் வெல்லும் கட்சியே ஆட்சியை அமைக்கும். அதில் பாஜக கூட்டணி 233 சீட்களில் வென்றுள்ளது. மகாராஷ்டிராவில் ஒரு கூட்டணி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவது இதுவே முதல்முறையாகும். பாஜக மட்டும் 133 இடங்களில் வென்றுள்ளது. ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 41 சீட்களிலும் வென்றுள்ளன. பாஜக கூட்டணியில் இருந்த இதர கட்சிகள் 3 சீட்களை கைப்பற்றின.
பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் அவர்களால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சியை அமைக்க வேண்டும். அதேநேரம் பாஜக 133 இடங்களில் வென்றுள்ள சூழலில் பாஜக இல்லாமல் அங்கு ஆட்சி அமைக்க முடியாது. இதனால் அங்கு யார் முதல்வர் பதவியை ஏற்கப் போகிறார் என்பதில் கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் கடந்த 2019 தேர்தல் சமயத்திலேயே முதல்வர் யார் என்பதில் முடிவெடுக்க முடியாமல் போனதால் தான் பாஜக- ஒருங்கிணைந்த சிவசேனா கூட்டணி உடைந்தது. ஆனால், அப்போது பாஜக 105 இடங்களில் மட்டுமே வென்று இருந்தது. இந்த முறை பாஜக 100க்கும் குறைவான இடங்களில் வென்று இருந்தால் ஷிண்டே முதல்வராக வாய்ப்பு இருந்து இருக்கும்.
ஆனால், பாஜக 133 இடங்களை மொத்தமாக அள்ளிவிட்ட நிலையில், அந்தக் கட்சியில் இருந்தே முதல்வர் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. குறிப்பாக ஃபட்னாவிஸுக்கு மீண்டும் முதல்வர் பதவி தரப்படலாம் எனத் தெரிகிறது. அதேநேரம் ஷிண்டே கொண்டு வந்த பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தான் வெற்றிக்குக் காரணமாக இருந்ததால் முதல்வர் பதவியில் ஏக்நாத் ஷிண்டே தொடர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இதனால் யார் முதல்வர் என்பதில் மீண்டும் கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போதுள்ள சட்டசபை வரும் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, அதற்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும். இன்னும் இரண்டு நாட்களே அதற்கு உள்ள நிலையில், இன்று முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இறுதி முடிவெடுக்கப்படும் என்றே தெரிகிறது. பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், அதன் பிறகு முதல்வர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications