அலர்ட்டான அமித்ஷா! மகாராஷ்டிராவில் வெல்லும் தாமரை? பட்னாவிஸ் + ஷிண்டே + அஜித் பவாருக்கு போன அட்வைஸ்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாக உள்ளார். இதனால் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவாரை டெல்லி அழைத்து அமித்ஷா முக்கிய அறிவுரைகள் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் தற்போது பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார். துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இருக்கிறார். ஏக்நாத் ஷிண்டேவை விட பாஜகவுக்கு தான் அதிக எம்எல்ஏக்கள் உள்ளன.

ஆனாலும் உத்தவ் தாக்கரேவிடம் இருந்து தனி அணியாக பிரிந்து வந்ததால் பாஜக அவருடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்து ஏக்நாத் ஷிண்டேவுக்கு கிப்ட்டாக முதல்வர் பதவியை வழங்கி உள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து தற்போது அங்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 23ல் ரிசல்ட் வெளியாக உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
தற்போது பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசிவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. அதேபோல் இந்த கூட்டணிக்கு பெயர் மகாயுதி என அழைக்கப்படுகிறது. அதேபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.
இரு கூட்டணியிலும் இன்னும் முழுமையாக தொகுதி பங்கீடு என்பது முடியவில்லை. ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளின் பிரமுகர்கள் போட்டியிட விரும்புகின்றனர். இதனால் இன்னும் தொகுதி பங்கீடு முழுமையாக நிறைவு பெறவில்லை. இருப்பினும் கூட தற்போது பாஜக கூட்டணியில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 278 தொகுதிகளுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த 278 தொகுதிகளை பாஜக, ஷிண்டே சிவசனோ மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பங்கிட்டு கொண்டுள்ள நிலையில் 158 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் 10 தொகுதிகளில் மட்டும் இழுபறி நிலவி வருகிறது. இந்த 10 தொகுதிகளில் போட்டியிட அனைத்து கட்சியினரும் விரும்புகின்றனர். இதனால் உடன்பாடு என்பது எட்டுவதில் இழுபறி ஏற்பட்டு வரும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு பிரச்சனைக்கு சுமூகமான முடிவு காணப்படும் என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தான் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்பதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாக உள்ளார். இதனால் அவர் தொடர்ந்து மகாராஷ்டிரா அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி கூட்டணியில் உள்ள துணை முதல்வரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்டவர்களை டெல்லிக்கு அழைத்து ஐடியாக்களை வழங்கி உள்ளார்.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் இவர்கள் 3 பேரும் 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர். இந்த வேளையில் அமித்ஷா, ‛‛மகாராஷ்டிராவில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் வெற்றியை பெற முடியும். கட்சிகள் இடையேயும், தொகுதி வாரியாகவும் முரண்பாடுகள் எதுவும் இருக்க கூடாது. தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள் களமிறங்குவதை தடுக்க வேண்டும். போட்டி வேட்பாளர்கள் போட்டியிடுவதை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது. அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். ஏனென்றால் தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுகளும் முக்கியம்'' என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications