மகாராஷ்டிரா ட்விஸ்ட்.. கிங் மேக்கரான சிவ சேனா.. முதல்வர் பதவிக்கு ஆசை! பாஜக என்னசெய்யும்?
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் முடிவு புதிய திருப்பத்தை ஏற்பட்டுள்ளது. சிவசேனா, கிங்மேக்கராக மாறியுள்ளதால் முதல்வர் பதவி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. பாஜக சார்பில் தற்போதைய முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ்தான் மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் சேர்ந்து களமிறங்கினர்.
மொத்தம் 164 தொகுதிகளில் பாஜகவும் 124 தொகுதிகளில் சிவசேனாவும் களமிறங்கின. இப்படி நடைபெற்ற தொகுதி பங்கீட்டில் சிவசேனாவுக்கு அதிருப்தி இருந்தது உண்மைதான் என்றாலும், வேறு வழியின்றி, இந்த பங்கீட்டை ஏற்றுக் கொண்டன.
பாஜகவுக்கும் பாதகம்.. காங்கிரசுக்கு சாதகமில்லை.. ஹரியானாவில் இடியாப்ப சிக்கலுக்கு இதுதான் காரணமா!
சிவசேனா தயவு தேவை
எப்படியும் மகாராஷ்ட்ராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து விடுவோம் என்று பாஜக தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தில் கூறிவந்தனர். ஆனால் தற்போதைய டிரெண்ட்படி பார்த்தால் பாஜக 99 தொகுதிகளில்தான் முன்னிலை பெற்று வருகிறது. சிவசேனா 56 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே சிவசேனா ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சிவசேனா கிங் மேக்கர்
எனவே சிவசேனா என்ன கேட்டாலும் அதை செய்து கொடுக்க வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. முதல்வர் பதவியையும் கூட விட்டுத்தர வேண்டிய நிலை உள்ளது. முக்கிய அமைச்சரவை இலாக்காக்கள், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சிவசேனா முன்வைக்க வாய்ப்பு உள்ளது. பாஜக இந்த கோரிக்கைகளை, ஏற்க மறுத்தால் சிவசேனாவை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள காங்கிரஸ் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் திட்டம்
தற்போதைய சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி கூட்டணி 109 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 145. எனவே சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி பக்கம் வந்து விட்டால், அது எளிதாக நடைபெறும். சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டு தரவும் காங்கிரஸ் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக-சிவசேனா கூட்டணிக்குத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர் என இன்று மாலை அளித்த பேட்டியில், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்ரே திட்டவட்டடமாக கூறிவிட்டார். ஆனால் முதல்வர் பதவி குறித்து ஆலோசிக்க வேண்டியிருக்கிறது எனவும் கூறியுள்ளார். 50:50 பார்முலா, அதாவது அமைச்சரவையில் இரு கட்சிகளுக்கும் சரிபாதி இடம் என்பது சிவசேனா கோரிக்கையாக உள்ளது. இதற்கு பாஜக சம்மதித்தால் கூட்டணி தொடரும் அல்லது, மகாராஷ்டிராவில் அரசியல் பரபரப்பு ஏற்படும்.
கடந்த தேர்தல்
கடந்த மகாராஷ்டிர சட்டசபை பொதுத் தேர்தலின்போது, காங்கிரஸ் கூட்டணி தனியாகவும், பாஜக மற்றும் சிவசேனா தனித்தனியாகவும் தான் போட்டியிட்டனர். தேர்தலுக்கு பிறகு தான் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க வசதி செய்தது. ஒருவேளை சிவசேனா இந்த முறை காங்கிரஸ் பக்கம் சென்றால், மீண்டும் சிவசேனா மகாராஷ்டிராவில் தனது ஆதிக்கத்தை இன்னும் பலமாக நிலைநாட்ட உதவும்.
பழைய சிவசேனா
பாஜக தங்களை ஆதிக்கம் செலுத்துவதாக சிவசேனா கட்சியின் பல தலைவர்களும் அதிருப்தியில் இருந்த நிலையில், அந்த நிலையை மாற்றி 1990களில் சிவசேனா எப்படி ஒரு வலுவான கட்சியாக மகாராஷ்டிராவை ஆட்டி வைத்ததோ அது போல மாறும் வாய்ப்பு இருக்கும் என்பதால், காங்கிரஸ் பக்கம் சிவசேனா போய்விடுமோ என்ற எதிர்பார்ப்பும் நிலவுவதை மறுக்க முடியாது.