'சூப்பர் மார்க்கெட்டுகளில் இனிமேல் மதுபானம் விற்கலாம்' அதிரடியாக அறிவித்த மாநிலம்..குடிகாரர்கள் குஷி
மும்பை: பல்பொருள் அங்காடிகள்(சூப்பர் மார்கெட்டுகள்) கடைகளில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி அளித்து மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் குடிகாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பக்தர்களுக்கு குட் நியூஸ்... தினசரியும் சாமி தரிசனம் செய்யலாம் - தடையை நீக்கிய தமிழக அரசு
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் காங்கிரஸ்-சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் நடைபாதை கடைகளில் மது விற்பனையை அனுமதிக்கும் திட்டத்தை மகாராஷ்டிரா அமைச்சரவை நிறைவேற்றியது.
சூப்பர் மார்கெட்டுகளில் மது விற்பனை
இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா கடைகள் மற்றும் நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 1,000 சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் "ஷெல்ஃப்-இன்-ஷாப்" முறை மூலம் மது விற்பனை செய்யலாம்.
இந்த பகுதிகளில் விலக்கு
இருப்பினும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் மது விற்க அனுமதிக்கப்படாது. மேலும், மதுவிலக்கு அமலில் உள்ள மாவட்டங்களிலும் மது விற்பனை அனுமதிக்கப்படாது. மது விற்பனைக்கான உரிமத்திற்கு சூப்பர் மார்க்கெட்டுகள் ரூ.5,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் கூறும் காரணம்
விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் தரும் பழங்கள் சார்ந்த ஒயின் ஆலைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மாநில அரசு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா திறன் மேம்பாட்டு அமைச்சர் நவாப் மாலிக் நிருபர்களிடம் தெரிவித்தார். சூப்பர் மார்கெட்டுகளில் மது விற்பனை செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால் மகாராஷ்டிரா மாநில குடிகாரர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.
பாஜக கடும் எதிர்ப்பு
உத்தவ் தாக்கரே அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ''சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் அரசு கொரோனா தொற்றுநோயின் இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு உதவவில்லை, ஆனால் மாநிலத்தில் மது விற்பனையை ஊக்குவிக்க முன்னுரிமை அளிக்கிறது. மக்களை மது அருந்துவதை ஊக்குவிக்கிறார்கள். மகாராஷ்டிராவை மதுபான மாநிலமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்'' என்று மாநில பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.