மகாராஷ்டிரா- ஆட்சி அமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் அழைப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுக்கு அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நவம்பர் 11-ந் தேதிக்குள் பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநர் கோஷ்யாரி கெடு விதித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 105 இடங்களில் வென்ற பாஜகவும் 56 இடங்களில் வென்ற சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தன.

ஆனால் சுழற்சி முறையில் முதல்வர் பதவி உள்ளிட்ட சிவசேனாவின் நிபந்தனைகளால் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதையடுத்து முதல்வர் பட்னாவிஸ் தமது பதவியை ராஜினாமா செய்தார்.
அதேநேரத்தில் சிவசேனா - காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலமும் முடிவடைகிறது.
இதனால் புதிய அரசு அமையுமா? ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா? என்கிற கேள்வி எழுந்தது. இதனிடையே சட்டசபை தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவின் சட்டசபை குழு தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் நவம்பர் 11-ந் தேதிக்குள் பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநர் கோஷ்யாரி கெடு விதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications