வேலையை தொடங்கிய மகா. ஆளுநர்.. அதிருப்தி சிவசேனா எம்எல்ஏ வீடுகளுக்கு பாதுகாப்பு தர டிஜிபிக்கு கடிதம்
மும்பை: அசாமில் தங்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
அணி தாவல்
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 2 நாட்களில் மட்டும் மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 39 ஆக அவர்களின் பலம் அதிகரித்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 23 ஆம் தேதி அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் யாருக்கு பலம் உள்ளது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம் என சிவசேனா கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தும் இதை உறுதிபடுத்தி இருக்கிறார்.
பாதுகாப்பு நீக்கம்
இந்த நிலையில், அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் உத்தவ் தக்கரே, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலிப் வால்சே பாட்டில், டிஜிபி ரஜ்னிஷ் சேத் மற்றும் அனைத்து காவல் ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், "தங்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றுவிட்டதாக கூறியுள்ளனர். பழிவாங்கும் விதமாக சட்டவிரோதமான முறையில் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கொரோனாவில் குணமடைந்த ஆளுநர்
இந்த நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு திரும்பி இருக்கிறார். 80 வயதான அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தெற்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மகா விகாஷ் அகாடி தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் வருகை மகாராஷ்டிரா அரசியல் களத்தில் மேலும் விறுவிறுப்படைய செய்திருக்கிறது.
ஆளுநர் கடிதம்
இந்த நிலையில், பணிக்கு திரும்பிய உடனே மகாராஷ்டிரா அரசியல் குழப்ப விவகாரம் தொடர்பாக ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி இருக்கிறார். அதன் முதல் கட்டமாக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்க மகாராஷ்டிரா மாநில டிஜிபி, மும்பை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதி இருக்கிறார். இதனை தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எழுதிய கடிதத்தையும் அவர் பரிசீலிப்பார் என்று கூறப்படுகிறது.