சுப்ரியா சுலே.. ரோஹித் பவார்.. ஜஸ்ட் 2 பேர்.. இதுதான் அஜீத் பவார் கொந்தளிக்க காரணம்!
அஜித்பவாரின் அதிரடி மாற்றத்துக்கு யார் காரணம் என்ற பேச்சு எழுந்துள்ளது
மும்பை: ஜஸ்ட் 2 பேர்தான்.. அஜீத் பவார் இத்தனை காலமாக அமைதியாக இருந்து விட்டு இப்போது திடீரென புரட்சியை கிளப்ப முக்கியக் காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
சரத் பவார் குடும்பத்தினர் மொத்தமாக அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அஜீத் பவார் இப்படி காலை வாரி விடுவார் என அவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
நேற்று ராத்திரி வரை கூடவே இருந்த அஜீத் பவார் இன்று காலை பாஜக முகாமுக்கு மாறி, துணை முதல்வராவார் என்பதை அவர்கள் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அஜீத் பவார் புரட்சியாளராக மாற திடீர் காரணங்கள் எதுவும் இல்லை.. இது நீண்ட நாள் புகைச்சல் என்று மகாராஷ்டிரா அரசியலை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
பவார் குடும்பம்
மகாராஷ்டிராவில் அரசியலில் புகழ் பெற்ற குடும்பங்களில் ஒன்றுதான் பவார் குடும்பம். பவாரின் அப்பா கோவிந்தராவ் பவார், அம்மா சாரதா பாய் பவார். கோவிந்தராவ் பவார் அந்தக் காலத்திலேயே கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்தவர். சாரதா பாய் பவாரும் கூட பின்னாளி கூட்டுறவு சங்கத்திற்குத் தலைவராக இருந்தவர்தான்.
முக்கிய புள்ளி
கோவிந்தராவ் தம்பதிக்கு மொத்தம் 11 பிள்ளைகள். இதில் மூத்தவர்தான் சரத் பவார். இவரது தம்பிகள் அப்பா சாஹேப் பவார் மற்றும் ஆனந்த்ராவ் பவார். இவர்கள்தான் இந்தக் கதையின் முக்கியப் புள்ளிகள். சரத் பவார் மற்ற சகோதர, சகோதரிகள் போல இல்லை. படிப்பில் அத்தனை நாட்டம் இல்லை. அது ஏறவும் இல்லை. எனவே மாணவப் பருவத்திலேயே அரசியல் பக்கம் ஈர்க்கப்பட்டார்.
இளம் முதல்வர்
இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்தவர் அவர். அதை விட முக்கியமாக தனது 38வது வயதில் மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியைக் கைப்பற்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் திகைக்க வைத்தவர். மகாராஷ்டிராவின் இளம் முதல்வர் என்ற பெருமையும் இவருக்கே உண்டு.
அஜித்பவார்
சரத் பவார் அரசியலில் படு வேகமாக உச்சத்திற்குப் போனவர். அவரது அரசியல் வாழ்க்கையில் பேருதவியாக இருந்தவர்தான் அஜீத் பவார். இவர் சரத் பவாரின் தம்பி ஆனந்த ராவ் பவாரின் மகன் ஆவார். அஜீத் பவார் தனது சித்தப்பா சரத் பவாரின் நிழல் போல வலம் வந்தவர். அதேசமயம், சரத் பவாரைத் தாண்டி அவரால் பெரிதாக எதுவும் செய்து விட முடியவில்லை.
ரோஹித் பவார்
என்னதான் பாடுபட்டாலும், உழைத்தாலும் எம்எல்ஏ பதவி, துணை முதல்வர் பதவி. இதற்கு மேல் அவரால் போக முடியவில்லை. இந்த நிலையில்தான் அப்பா சாஹேப்பின் பேரன் ரோஹித் பவார் அரசியலில் குதிக்கிறார். அவரை அரசியலுக்குக் கொண்டு வருவது சரத் பவார். அதே போல மறுபக்கம் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே , அரசியலில் குதிக்கிறார்.
முக்கியத்துவம்
இவர்களது வருகை அஜீத் பவாரை அதிர வைக்கிறது. காரணம், தன்னை விட இவர்களுக்கு சரத் பவார் முக்கியத்துவம் கொடுப்பதாக அவர் கருதினார். மகளை லோக்சபா எம்பியாக்கிய சரத் பவார், மேலும் மேலும் அவரது உயர்வுக்கு ஆதரவாக இருக்கிறார். இதெல்லாம் அஜீத் பவாருக்குப் பிடிக்கவில்லை. இதனால் வேதனையில் இருந்து வந்த அஜீத் பவார், தனக்கென தனி வழிக்காக காத்துக் கொண்டிருந்தார்.
ஆதங்கம்
இந்த சமயத்தில்தான் பாஜக ரூபத்தில் அவரைத் தேடி வந்த ஆஃபரை சரியான முறையில் அஜீத் பவார் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். என்னதான் சரத் பவார் கட்சியில் நம்பர் டூ, பவாரின் நிழல் என்று இருந்தாலும் கூட தனித்துவம் மிக்க தலைவராக வர முடியாமல் போய் விட்டதே என்ற ஆதங்கம்தான், அஜீத் பவாரை இந்த முடிவெடுக்க வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.
நெருக்கடி
இதுவரை எப்படியோ.. ஆனால் இனிமேல் அஜீத் பவாருக்கு மிக மிக நெருக்கடியான சூழல்தான் ஏற்படும். காரணம், அவர் ஒரே நேரத்தில் பலரையும் பகைத்து கொண்டு விட்டார். குடும்பத்தினரின் அன்பையும் இழந்திருக்கிறார். மக்களையும் அவர் எப்படி சந்திக்க போகிறார் என்று தெரியவில்லை. பாஜகவும் இவரை எப்படி பயன்படுத்த போகிறது என்றும் புரியவில்லை. மொத்தத்தில் அஜீத் பவாரின் நிலை போக போகத்தான் தெளிவாகும்.