உடைவதுதானே கூட்டணி அரசியல்! மராத்தா இடஒதுக்கீடு- மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியில் வெட்டு குத்து!
மும்பை: மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மகாராஷ்டிரா மாநில அரசின் முடிவுக்கு கூட்டணி கட்சியான என்சிபி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவின் மண்ணின் மைந்தர்களாகிய மராத்தா ஜாதியினர் பல ஆண்டுகளாக தங்களது கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர். மகாராஷ்டிரா அரசுகள் சட்டம் இயற்றினாலும் உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போடுகிறது.

தற்போது மராத்தா இடஒதுக்கீடுப் போராட்டத்தை சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜாரங்கே முன்னெடுத்துள்ளார். அவருக்குப் பின்னால் ஒட்டுமொத்த மராத்தா ஜாதியும் அணிதிரண்டுள்ளது. மும்பையில் ஜனவரி 26-ந் தேதி பல லட்சக்கணக்கான மராத்தா ஜாதியினர் ஒன்று திரள, மனோஜ் ஜாரங்கே மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார். ஆனால் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசு உடனடியாக தலையிட்டு மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உறுதி மொழி அளித்தார். இதனைத் தொடர்ந்து மனோஜ் ஜாரங்கே உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். அதாவது குன்பி எனும் சான்றிதழ் பெற்ற மராத்தா ஜாதியினரும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைப் பெற முடியும் என்பதுதான் தற்போதைய மகாராஷ்டிரா அரசின் நிலைப்பாடு. இதனை மனோஜ் ஜாரங்கே ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு ஆட்சியில் பங்கேற்றுள்ள அஜித் பவார் தலைமையிலான என்சிபி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக என்சிபி கட்சியின் அமைச்சர் சகன் பூஜ்பால் கூறுகையில், கொல்லைப்புற வழியாக மராத்தா இடஒதுக்கீடு வழங்குவது ஏற்புடையது அல்ல என பகிரங்கமாக போர்க்கொடி தூக்கி இருக்கிறார். மேலும், மராத்தா இடஒதுக்கீட்டுக்காக 35 ஆண்டுகள் தொடர்ந்து போராடி வருகிறேன்; ஆதரவு தந்து வருகிறேன். ஆனால் சிலர் மராத்தா ஜாதியினருக்கான இடஒதுக்கீடு என்ற பெயரில் மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் என குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் என்சிபி கட்சி தலைவர்கள் சிலர் இந்த கருத்தை ஏற்கவும் மறுக்கின்றனர்.
பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நாராயண் ரானேவும் மகாராஷ்டிரா அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஓபிசி இடஒதுக்கீட்டை ஆக்கிரமிக்கும் வகையில் மராத்தா ஜாதியினருக்கும் அந்த இடஒதுக்கீட்டை பகிர்ந்தளிப்பது அசாதாரண நிலைமையைத்தான் உருவாக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications