நேரடியாக களத்தில் இறங்கிய அமித்ஷா.. மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளை கை கழுவும் பாஜக? ட்விஸ்ட்
மும்பை: மகாராஷ்டிராவில் இப்போது பட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இதற்கிடையே கூட்டணிக் கட்சிகளைக் கழற்றி விட்டுவிட்டு அங்குத் தனித்துக் களமிறங்க பாஜக திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுக்க கட்சியை வலுப்படுத்த அமித் ஷா அறிவுறுத்திய நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் இப்போது பாஜக- சிவசேனா- என்சிபி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இருப்பினும், அங்குக் கடந்த சில காலமாகவே ஆளும் பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மறுத்தாலும் கூட அங்கு நடக்கும் விஷயங்களை வைத்துப் பார்த்தால் சலசலப்பு இருப்பது போலவே தெரிகிறது.

பாஜக திட்டம்
அங்கு விரைவில் உட்கட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் மகாயுதி கூட்டணியில் இருக்கும் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை விட்டுவிட்டுத் தனித்துப் போட்டியிட பாஜக திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும் கூட்டணியை மட்டுமே நம்பி இருக்காமல் மாநிலம் முழுக்க கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பாஜக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேரடியாக இறங்கிய அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் மும்பைக்குச் சென்றபோது மாநிலத்தில் உள்ள மூத்த பாஜக தலைவர்களைச் சந்தித்தார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் இப்போது தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக உள்ள நிலையில், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி அமைப்புகள்
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை அங்குப் பல மாநகராட்சிகள் காலியாக 2 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளன. மும்பை உட்படப் பல முக்கிய மாநகராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளே இல்லை. இதனால் நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதற்கிடையே அடுத்த நான்கு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு மாநில தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கேட்டுக் கொண்டது. மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பையும் விரைவில் வெளியிட வலியுறுத்தியிருந்தது.
இந்தச் சூழலில் தான் நேரடியாக அமித் ஷா களத்தில் இறங்கி ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் தான் தனித்துப் போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மகாயுதி கூட்டணி என்பது மகாராஷ்டிராவில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுப்பதாக இருக்கக்கூடாது என்பதை அமித் ஷா திட்டவட்டமாக அந்த கூட்டத்தில் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக வட்டாரங்கள்
இது தொடர்பாக மகாராஷ்டிர பாஜக வட்டாரங்கள் கூறுகையில், "பாஜக ஒரு தேசியக் கட்சி. இதனால் நாடு முழுக்க கட்சியை வளர்த்தெடுப்பது எங்கள் கடமை. உள்ளாட்சித் தேர்தல்கள் தனித்துப் போட்டியிடுவது சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். மேலும், வரும் 2029ல் நடக்கும் மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பாஜக தனித்துக் களமிறங்கவும் தயாராக இது உதவும். கடந்த தேர்தலில் கூட 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜகவே இருந்தது. இதனால் 2029ல் கூட்டணி ஆதரவு இல்லாமல் எளிதாக ஆட்சியை அமைக்க முடியும்" என்றார்.
மகாராஷ்டிராவில் உள்ள தானே மாநகராட்சியில் ஷிண்டேவுக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. அங்கு சிவசேனாவுக்கு கூட்டணிக் கட்சியான பாஜகவே பிரதான போட்டியாக இருக்கும். மறுபுறம் புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதிகளில் அஜித் பவாரின் என்சிபி கட்சி வலுவாக உள்ள நிலையில், அங்கும் அவர்களுக்கு எதிராக பாஜக களமிறங்குகிறது.












Click it and Unblock the Notifications