கேரளா மினி பாகிஸ்தான்.. பிரியங்காவுக்கு பயங்கரவாதிகள் சப்போர்ட்.. மகாராஷ்டிரா அமைச்சர் திடுக் பேச்சு
மும்பை: கேரளாவில் இந்துக்கள் தொகை குறைந்துவிட்டது; கேரளா மாநிலமே ஒரு மினி பாகிஸ்தானாக மாறிவிட்டது; கேரளாவில் போட்டியிட்ட ராகுல் காந்திக்கு முன்னர் பயங்கரவாதிகள் வாக்களித்தனர்; தற்போது ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்திக்கு பயங்கரவாதிகள் ஆதரவு தந்து வாக்களித்துள்ளனர் என்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நிதேஷ் ரானே பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த நாராயண் ரானேவின் மகன் நிதேஷ் ரானே. மகாராஷ்டிராவின் புதிய அரசில் மீன்வளத்துறை அமைச்சராக உள்ளார்.

மகாராஷ்டிராவின் புனே அருகே நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நிதேஷ் ரானே பேசியதாவது: கேரளா என்பது இந்தியாவின் ஒரு அங்கம்; ஒரு மாநிலம். ஆனால் கேரளாவில்தான் இந்துக்களின் மக்கள் தொகை அதிவேகமாக குறைந்து கொண்டே வருகிறது.
கேரளா மாநிலம் தற்போது ஒரு மினி பாகிஸ்தானாக மாறிவிட்டது. கேரளாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இது கவலைக்குரியதாகும்.
கேரளாவில் உள்ள பயங்கரவாதிகள் முன்னர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர்; தற்போது ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்திக்கு கேரளா பயங்கரவாதிகள் ஆதரவு தந்து வாக்களித்துள்ளனர். கேரளாவில்தான் இந்துக்களை மதம் மாற்றம் செய்கிற லவ் ஜிஹாத் சம்பவங்களும் அதிகமாக நடைபெறுகின்றன.
பாகிஸ்தானில் இந்துக்கள் எப்படி நடத்தப்படுகின்றனர்?அதேபோல கேரளாவிலும் இந்துக்கள் நடத்தப்பட்டால் நாடு என்னவாகும்? இந்துக்களை அனைவரும் பாதுகாக்க வேண்டும். நான் இப்படி பேசுவது தவறு என்றால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உண்மை என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிதேஷ் ரானே பேசினார்.
மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானேவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவர் அதுல் லோண்டே கூறுகையில், காங்கிரஸுக்கு வாக்களிப்பவர்கள் பயங்கரவாதிகள்; கேரளா ஒரு மினி பாகிஸ்தான் என்கிறார் அமைச்சர் பதவி வகிக்கும் நிதேஷ் ரானே. இது மகாராஷ்டிராவுக்கு தீராத அவப்பெயரைத்தான் பெற்றுத்தரும். மகாராஷ்டிராவில் நடக்கிற இந்து- முஸ்லிம் மோதல்கள் உள்ளிட்டவை குறித்துதான் நிதேஷ் ரானே கவலைப்பட வேண்டும். பாஜகவினரின் பிளவுவாத அரசியலைத்தான் இது அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது என்றார்.












Click it and Unblock the Notifications