காலியாகும் உத்தவ்தாக்கரே கூடாரம்! அதிருப்தி எம்எல்ஏக்களுடன் இணைந்த எம்பிக்கள்! எத்தனை பேர் தெரியுமா?
மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக எம்எல்ஏக்களை தொடர்ந்து எம்பிக்களும் ஏக்நாத் ஷிண்டேவுடன் கைகோர்த்து கவுஹாத்தி ஓட்டலில் தங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கூடாரம் காலியாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவில் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
மகா விகாஷ் அகாடி எனும் இந்த கூட்டணியில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குழப்பம் ஏற்படவில்லை. இதனால் சுமூகமான முறையில் ஆட்சி நடைபெற்று வந்தது.

விடுதியில் சிவசேனா எம்எல்ஏக்கள்
இந்நிலையில் தான் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கூட்டணி வைத்திருப்பதை அக்கட்சியின் சில தலைவர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மும்பையை விட்டு வெளியேறினர். தற்போது அவர்கள் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.

40 எம்எல்ஏக்கள் ஆதரவு
சிவசேனா கட்சிக்கு மொத்தம் 55 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ஏக்நாத் ஷிண்டேவுடன் சிவசேனாவின் 40 எம்எல்ஏக்களும், சுயேச்சைகள் 6 பேரும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக வெறும் 12 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

எம்பிக்களும் ஆதரவு
இந்நிலையில் தான் எம்எல்ஏக்கள் மட்டுமின்றி சில எம்பிக்களும் ஏக்நாத் ஷிண்டேவுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவசேனா கட்சியின் 19 மக்களவை எம்பிக்கள், 3 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர். இதில் 5 பேர் வரை ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எந்தெந்த எம்பிக்கள்
குறிப்பாக தானே எம்பி ராஜன் விசாரி, வாசிம் தொகுதி எம்பி பாவ்னா காலி, ராம்டேக் தொகுதி எம்பி குர்பால் துமனே, கல்யான் எம்பி ஸ்ரீகாந்த் சிண்டே பால்கார் எம்பி ராஜேந்திர காவிட் ஆகியோர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ராஜன் விசாரி மற்றும் ஸ்ரீகாந்த் சிண்டே ஆகியோர் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஓட்டலில் உள்ளதாக நம்பப்படுகிறது. இதற்கிடையே குர்பால் துமனே இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். நான் எப்போதும் உத்தவ் தாக்கரேவுக்கு தான் ஆதரவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

காலியாகிறதா கூடாரம்?
ஏக்நாத் ஷிண்டேவுடன் முதலில் 30 எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறப்பட்டது. அதன்பிறகு இந்த எண்ணிக்கை 33, 35 என தற்போது 40 என்ற அளவில் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது எம்பிக்கள் சிலரும் ஏக்நாத் ஷிண்டேவுடன் தொடர்பில் இருக்கும் தகவல் கசிந்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் உத்தவ்தாக்கரேவுக்கு ஆதரவான எம்எல்ஏ, எம்பிக்களின் கூடாரம் காலியாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications