மகாராஷ்டிராவில் ஒரு மணி நேரத்திற்கு 23 கொரோனா நோயாளிகள் பலி.. ஆக்சிஜன் லாரிகளும் பிடித்துவைப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் கொரோனாவால் 568 பேர் பலியாகியுள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்திற்குச் செல்லும் ஆக்சிஜன் லாரிகளையும் மராட்டிய அதிகாரிகள் பிடித்து வைப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வைர்ஸ பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
இதனால், மகாராஷ்டிராவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு.. மகாராஷ்டிரா, டெல்லி, உ.பி.யில் வெறிச்சோடிய சாலைகள்.. முடங்கிய முக்கிய நகரங்கள்!
மகாராஷ்டிரில் என்ன நிலை
இருப்பினும், மாநிலத்தில் நிலைமைக் கட்டுக்குள் வந்ததாகத் தெரியவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் புதிதாக 67,468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் புனே கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. புனே வட்டத்தில் மட்டும் 7684 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்பு
மகாராஷ்டிராவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா உயிரிழப்பும் 568ஆக உயர்ந்துள்ளது. அதாவது அங்கு சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 23 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். அதிகபட்சமாக மும்பை வட்டத்தில் 62 பேரும் நாக்பூர் வட்டத்தில் 41 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்று நாசிக் பகுதியில் ஆக்சிஜன் சப்ளேவில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 24 பேர் உயிரிழந்தனர்
ஆக்சிஜன் சிலிண்டர்கள்
மகாராஷ்டிராவில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்திலுள்ள பெரும்பாலான படுக்கைகள் நிரம்பியுள்ளன. இது மகாராஷ்டிராவில் உள்ள சுகாதார கட்டமைப்பில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் மாநிலத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆக்சிஜன் லாரிகள்
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்திற்குச் செல்ல வேண்டிய ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் லாரிகள் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசங்கள் போன்ற மாநிலங்களில் தடுத்து நிறுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதை அம்மாநில அரசுகள் செய்யவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகளே இப்படிச் செய்வதாகவும் மத்தியப் பிரதேச முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிவராஜ் சிங் அலுவலகம்
இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய முதல்வர் அலுவலகத்தில் இருந்து சிவராஜ் சிங் சவுகானே நேரடியாக உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய முதல்வர்களுடன் தொலைப்பேசியில் பேசியதாக முக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னரே மாநிலத்திற்குத் தேவையான ஆக்சிஜன் லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆக்சிஜன் லாரிகளுக்கு உட்சபட்ச பாதுகாப்பு
மத்தியப் பிரதேசத்திலும் கொரோனா நோயாளிகள் அதிகமாகி வருகின்றனர். இதனால் ஆக்சிஜன் தேவையும் உயர்ந்துள்ளது. இப்போது மத்திய பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் லாரிகளுக்கு அம்புலன்ஸ் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனை சுமந்து வரும் லாரிகளுககு எவ்வித சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்த லாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.