மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 85 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு- டெல்லியைவிட அதிகம்- மொத்த எண்ணிக்கை 252
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 248 பேருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இன்று 85 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,900. இம்மாநிலத்தில் இன்று 20 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 14,065.

மும்பையில் கடும் பாதிப்பு
மும்பையில் மட்டும் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,510. ஆசியாவின் மிகப் பெரிய குடிசை பகுதியான தாராவியில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். மும்பையில் நேற்று 1,333 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

டெல்லியில் அதிகரிப்பு
தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்று 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. டெல்லியில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 248. டெல்லியில் தற்போது 2,191 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜஸ்தான், குஜராத் ஓமிக்ரான் பாதிப்பு
ராஜஸ்தானி்ல் மேலும் 22 பேருக்கும் குஜராத்தில் மேலும் 19 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து ராஜஸ்தானில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 68. குஜராத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 1,089 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
Recommended Video

கேரளாவில் 2,846 பேருக்கு கொரோனா
கேரளாவில் இன்று 2,846 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் முதலாவது ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒடிஷாவில் மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியானது. துபாயில் இருந்து ஒடிஷா வந்த நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒடிஷாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இன்று இரவு 7 மணி வரை மொத்தம் 57 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications