மோடியை மட்டுமல்ல.. அமித் ஷாவையும் அழைப்போம்.. பதவி ஏற்பு விழாவிற்கு சிவசேனா மாஸ் பிளான்!
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக பதவி ஏற்கும் விழாவிற்கு பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவை அழைப்போம் என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக பதவி ஏற்கும் விழாவிற்கு பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவை அழைப்போம் என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார்.மும்பையில் நடைபெற்ற மூன்று கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் உத்தவ் தாக்கரே ஒருமனதாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இன்று அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

இந்த நிலையில் பதவி ஏற்பு விழா மும்பையில் வரும் டிசம்பர் 1ம் தேதி மாலை நடக்க உள்ளது. மாலை 5 மணிக்கு சிவாஜி பார்க்கில் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது. இதற்காக இப்போதே அங்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மிகப்பெரிய அளவில் மேடை அமைக்கும் ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது.
மாநில தலைவர்கள் பலர் இதற்கு அழைக்கப்பட உள்ளனர். காங்கிரஸ் கட்சியுடன் பல்வேறு மாநிலங்களில் கூட்டணி வைத்து இருக்கும் தலைவர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகத்தில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

அதே சமயம் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை அழைக்கவும் சிவசேனா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், அரசியல் தலைவர்கள் எல்லோரையும் நாங்கள் அழைப்போம். மரியாதை கருதி தலைவர்கள் எல்லோரையும் நாங்கள் அழைப்போம்.
பிரதமர் மோடியை அழைப்போம். அதேபோல் பாஜக தலைவர் அமித் ஷாவையும் அழைப்போம். மற்ற பாஜகவின் முக்கிய தலைவர்களையும் அழைப்போம் என்று சஞ்சய் ராவத் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications