மகாராஷ்டிரா: நிதி, கூட்டுறவு, வேளாண் இலாகாக்கள் அஜித் பவார் என்சிபி வசம்- கடுப்பில் ஷிண்டே சிவசேனா!
மும்பை: மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசில் மிக முக்கியமான நிதி, கூட்டுறவு, வேளாண் துறைகளை துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி அணி பெறுகிறது. இது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவினரை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஷிண்டே சிவசேனா- பாஜக கூட்டணி அரசுக்கு அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி அணியினர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் இந்த அரசில் துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அஜித் பவார் என்சிபி அணிக்கு எந்த துறைகளை ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக கடந்த சில வாரங்களாக தீவிர ஆலோசனைகள் நடைபெற்றன. அஜித்பவார் அணி கேட்கும் முக்கியமான துறைகளை ஒதுக்கக் கூடாது என ஷிண்டே சிவசேனாவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற அஜித்பவார் அணியினர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினர்.
இந்நிலையில் நிதித்துறை, கூட்டுறவுத் துறை மற்றும் வேளாண் துறை உள்ளிட்ட முக்கியமான இலாகாக்கள், அஜித்பவார் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய தகவல்களின்படி நிதித்துறை, உணவு, கூட்டுறவு, பெண்கள்- குழந்தைகள் மேம்பாடு, வேளாண் துறை, மறுவாழ்வு மற்றும் நிவாரணம், சுகாதாரத்துறை ஆகியவை அஜித்பவார் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்தனைக்கும் முந்தைய சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் என்சிபி ஊழல் செய்திருந்ததாக பாஜகதான் குற்றம்சாட்டியிருந்ததது. தற்போது அதே துறையை என்சிபி வசமே பாஜகவே ஒப்படைக்கிறது என்பது விமர்சனத்துக்குரியதாகி இருக்கிறது.
இது தொடர்பாக துணை முதல்வர் அஜித்பவார் கூறுகையில், இலாகா ஒதுக்கீடு விவரங்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார். மேலும் முதல்வர் அலுவலக அதிகாரிகளுடம் இலாகா மாற்ற விவரங்களுடன் ஆளுநரை சந்தித்துவிட்டு திரும்பி உள்ளனர். இலாகா ஒதுக்கீடு விவகாரத்தில் என்சிபி- ஷிண்டே சிவசேனா இடையேயான இந்த மோதல் விரைவில் பூதாகரமாக வெடித்தாலும் ஆச்சரியமில்லை என்கின்றன மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications