இது ஒன்றும் ஹரியானா இல்லை.. அந்த வேலை இங்கே நடக்காது.. பாஜகவிற்கு சிவசேனா வார்னிங்!
ஹரியானாவில் ஜேஜேபி உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது போல பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க முடியாது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
Recommended Video
மும்பை: ஹரியானாவில் ஜேஜேபி உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது போல பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க முடியாது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. இந்த நிலையில் சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.
இந்த நிலையில் 5 ஆண்டுகளில் 2.5 ஆண்டுகள் சிவசேனா கட்சிக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று சிவசேனா கோரிக்கை வைத்துள்ளது. அப்படி செய்தால் மட்டுமே ஆட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்றும் சிவசேனா கண்டிப்புடன் கூறிவிட்டது.
ஏமாற்றம்
பாஜக உடனான கூட்டணி குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது பேட்டியில், இது ஒன்றும் ஹரியானா கிடையாது. நாங்கள் துணை முதல்வர் பதவியை கொடுத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நீங்கள் சென்ற முறை போல இந்த முறை சிவசேனா கட்சியை ஏமாற்ற முடியாது,.
எங்கள் அரசியல்
நாங்கள் ஒன்றும் ஜேஜேபி கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா கிடையாது. அவருடைய அப்பா போல போல இங்கு யாருடைய அப்பாவும் ஜெயிலில் இல்லை. நாங்கள் மக்களுக்காக அரசியல் செய்ய வந்திருக்கிறோம். உண்மைக்காக அரசியல் செய்து கொண்டு இருக்கிறோம்.
மதிக்க வேண்டும்
அரசியலில் எவ்வளவு தாழ்ந்து போக முடியும் என்பதை பாஜக நிரூபித்துள்ளது. எங்களுக்கு பதவி மேல் ஆசை கிடையாது. ஆனால் ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும். ஜனநாயகத்தை பாஜக இப்படி கொலை செய்ய கூடாது, என்று கூறியுள்ளார்.
அமித் ஷா திட்டம்
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, விரைவில் மகாராஷ்டிரா வர இருக்கிறார். இந்த வாரம் அவர் மகாராஷ்டிராவில் பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளார். அப்போது அவர் சிவசேனா கட்சி தலைவர்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.