ஷிண்டே தரப்புக்கு சிக்கல்? சிவசேனா எம்எல்ஏக்கள் தகுதி நீக்க மனுக்கள் இன்று விசாரணை! முக்கியம் ஆச்சே
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க விசாரணை இன்று நடைபெற உள்ளது. இதில் சபாநாயகர் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019இல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து அப்போது சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை அமைத்தது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.

சுமார் 2.5 ஆண்டுகள் அங்கு நல்ல முறையில் தான் ஆட்சி நடந்து வந்தது. இதற்கிடையே கடந்தாண்டு திடீரென ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.
ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கை கோர்த்தனர். இதனால் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து பாஜக- ஷிண்டே சிவசேனா இணைந்து ஆட்சியை அமைத்த நிலையில், ஷிண்டே முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது இருந்து ஒருங்கிணைந்த சிவசேனா கட்சியின் தலைமை கொறடா சுனில் பிரபு, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க மனுவை சபாநாயகரிடம் தாக்கல் செய்தார்.
இதற்குப் பதிலடி தரும் வகையில் ஷிண்டே கோஷ்டியும் தகுதி நீக்க மனுக்களை அளித்தது. அப்போது முதலே இரு தரப்பும் தனித்தனி பிரிவுகளாகவே இயங்கி வந்தது. இரு தரப்பும் தாங்கள் தான் ரியல் சிவசேனா என்று தொடர்ந்து கூறி வந்தனர். இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதில் சபாநாயகர் வேண்டும் என்றே தாமதம் செய்து வருவதாக உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
இந்தச் சூழலில் கடந்த ஜூலை மாதம் சபாநாயகர் ராகுல் நர்வேகர், ஷிண்டே தரப்பில் முதல்வர் ஷிண்டே உட்பட 40 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதேபோல உத்தவ் தாக்கரே தரப்பிலும் 14 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் அவர் விசாரணையைத் தொடங்கியிருந்தார். இதில் அடுத்த கட்ட விசாரணை நாளை 13ஆம் தேதி நடைபெற இருந்தது.
இருப்பினும், நாளைய தினம் தலைநகர் டெல்லியில் ஜி-20 சபாநாயகர்கள் உச்சி மாநாடு நடைபெறுவதால், விசாரணை ஒரு நாள் முன்னதாக இன்று நடைபெறும் எனச் சபாநாயகர் ராகுல் நர்வேகர் அறிவித்துள்ளார். விசாரணையைத் தாமதம் செய்யக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications