நள்ளிரவில் மளமளவென பற்றி எரிந்த மும்பை அமலாக்கத்துறை அலுவலகம்.. முக்கிய ஆவணங்கள் சேதம்?
மும்பை: மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவிய நிலையில், 12 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தெற்கு மும்பையின் பல்லார்டு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை (ED) அலுவலக கட்டிடத்தில் நள்ளிரவு 2:30 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இருப்பினும் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

மும்பை கரிம்போய் சாலையில் உள்ள கிராண்ட் ஹோட்டலுக்கு அருகில் உள்ள அமலாக்க இயக்குநரக அலுவலகம் அமைந்துள்ள பல மாடி கைசர்-ஐ-ஹிந்த் கட்டிடத்தில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, தீயணைப்புப் படையினர் உடனடியாக விரைந்து சென்று தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திலிருந்து வந்த காட்சிகளில் கட்டிடத்திலிருந்து அடர்த்தியான புகை வெளியேறுவது தெளிவாகத் தெரிகிறது. அதிகாலை 3:30 மணியளவில், தீ விபத்து இரண்டாம் நிலை தீயாக வகைப்படுத்தப்பட்டது.
ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் மட்டுமே தீ பரவியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எட்டு தீயணைப்பு இயந்திரங்கள், ஆறு ஜம்போ டேங்கர்கள், ஒரு வான்வழி நீர் கோபுரம், ஒரு சுவாசக் கருவி வேன், ஒரு மீட்பு வேன், ஒரு விரைவு நடவடிக்கை வாகனம் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவை விரைந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டன.
இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று மும்பை தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தீ விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடும் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், முக்கிய ஆவணங்கள் பல தீயில் கருகி சேதமடைந்திருக்க வாய்ப்பு அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications