மகாராஷ்டிரா: தொடர் உண்ணாவிரதம்; மராத்தா- ஓபிசி ஜாதிகளிடையே முற்றும் மோதல்- பேரிடியாக பதறும் பாஜக!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இம்மாநிலத்தில் மராத்தா ஜாதி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் ஜாதி ஆகியவற்றுக்கிடையேயான மோதல் அதிதீவிரமடைந்து வருகிறது. இரு ஜாதிகளிடையேயான இந்த அதிதீவிரமான பிளவு ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு மிகப் பெரும் சவாலாக உருவெடுத்து நிற்கிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரிதும் நம்பி இருந்தது. ஆனால் இந்தியா கூட்டணிதான் மகாராஷ்டிராவில் அதிக இடங்களைக் கைப்பற்றியது. இது பாஜக கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியானது.

தற்போது மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏற்கனவே குடைச்சல் கொடுத்து வருகின்றன. இன்னொரு பக்கம் மகாராஷ்டிராவில் மராத்தா மற்றும் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் ஜாதிகளிடையேயான மோதல் அதி உச்சத்தை எட்டியுள்ளது.
மராத்தா ஜாதியினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உக்கிரமான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு மனோஜ் ஜரங்கே தலைமை வகிக்கிறார். ஆனால் ஓபிசி பட்டியலில் மராத்தா ஜாதியினரை சேர்க்கவே கூடாது; இதனால் தங்களது இடஒதுக்கீடு உரிமை பறிபோகும் என அந்த ஜாதியினர் போராடுகின்றனர். இதனை வலியுறுத்தி அந்த ஜாதிகளின் லஷ்மண் ஹேக், நவ்நாத் வாக்ரே ஆகியோர் கடந்த 10 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மிக கடுமையாக எதிர்த்துள்ளார் மராத்தா தலைவர் மனோஜ் ஜரங்கே. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசுதான் இத்தகைய இருபெரும் ஜாதிகளுக்கு இடையேயான பிளவுக்கு காரணம் என்கிறார் மனோஜ் ஜரங்கே.
மகாராஷ்டிராவில் இரு பெரும் ஜாதிகளிடையே அதிதீவிரமாகும் மோதல் போக்கும் பிளவும் சட்டசபை தேர்தலில் பெரும் பின்னடைவைத் தரும் என்கிற அச்சத்தில் உறைந்து போயிருக்கிறதாம் டெல்லி பாஜக மேலிடம். இதனை விரைவில் முடிவுக்கு கொண்டு வர மாநில தலைவர்களுக்கும் பாஜக மேலிடம் கட்டளையிட்டுள்ளது என்கின்றன மும்பை தகவல்கள்.












Click it and Unblock the Notifications