நள்ளிரவில் சரிந்த பாறைகள்.! திடீரென புதைந்த கிராமம்.. மீட்பு பணிக்கு சென்ற தீயணைப்பு வீரரும் பலி!
மும்பை: மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 30க்கும் மேற்பட்டோர் இதன் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது..
வட இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அங்கே ராய்காட் என்ற பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் ஷிண்டே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
நிலச்சரிவு: மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் என்ற பகுதியில் பழங்குடியின கிராமம் ஒன்று இருக்கிறது. இங்கே காலாபூர் என்ற இடத்தில் நேற்றிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த வீடுகள் நிலச்சரிவில் சிக்கியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 75 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 30 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மலையில் இருந்து ஏராளமான மண் மற்றும் பாறைகள் வீட்டின் மீது விழுந்துள்ளன. இந்தச் சம்பவத்தால் இப்போது சுமார் 30 வீடுகள் புதைந்துள்ளன. இச்சம்பவம் மலையின் உச்சியில் அமைந்துள்ள தொலைதூர கிராமமான இர்சல்வாடி நடந்துள்ளது.. இந்த கிராமத்திற்குச் செல்ல சாலை வசதி கூட முறையாக இல்லையாம். சுமார் ஒரு கிமீ மலை ஏறிச் சென்றால் மட்டுமே இந்த கிராமத்தை அடைய முடியும் இதனால் மீட்புப் படையினர் விரைவில் கிராமத்தை அடைவதில் சிரமம் ஏற்பட்டது.
மீட்புப் பணி தீவிரம்: நிலச்சரிவு குறித்த தகவல் கிடைத்ததும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் இன்று காலை நிலச்சரிவு நடந்த இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கும் செயல்முறை குறித்தும் கேட்டறிந்தார்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், நவி மும்பை தீயணைப்பு படை மற்றும் போலீசாரும் அங்கே சென்றுள்ளனர். தீயணைப்பு படை வீரர் ஒருவரும் அந்த இடத்திற்குச் செல்லும் போது உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நிலைமை மோசம்: இது தொடர்பாக போலீார் கூறுகையில், "தற்போது 100க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளனர். பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது" என்றார். மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. ராய்காட் மாவட்டத்தில் உள்ள இரு முக்கிய ஆறுகளான சாவித்ரி மற்றும் பாதல்கனகாவில் நீர் அபாய எல்லையைத் தாண்டியுள்ளது.
மற்ற இரு முக்கிய ஆறுகளான குண்டலிகா மற்றும் அம்பா உள்ளிட்ட ஆறுகளிலும் நீர் படுவேகமாக அதிகரித்து வருகிறது. மும்பை, ராய்காட் மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க 12 என்டிஆர்எப் டீம்கள் இறக்கப்பட்டுள்ளன. அதில் 5 டீம்கள் மும்பையில் மட்டும் களமிறக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அங்கே பல இடங்களில் இன்று விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications